தமிழ்நாட்டில் சிறு குறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க அரசு அதிரடி: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சலுகை.

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2020, 2:13 PM IST
Highlights

மின்மாற்றியை மின்தேவை உள்ள நுகர்வோர் இடத்திலேயே அமைப்பதினால் மின் இழப்பு பெருமளவு குறையும். மின் அழுத்தம் சீராகும், மின்கடத்திகளின் நீளம் குறைவதால் உயரழுத்த, தாழ்வழுத்த விகிதம் மேம்படுவதுடன். நுகர்வோர்களுக்கு ஏற்படும் மின்தடைகள் பெருமளவில் குறையும்.

தமிழ்நாட்டில் சிறு குறு தொழிலாளர்களின் துயர் தீர்க்கும் வகையிலும், தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில் புரிவோருக்கு மின்சாரம் சம்பந்தப்பட்ட இடர்பாடுகளை களையும் வகையில் தாழ்வழுத்த மின் இணைப்பு பெறுவதற்கு தற்போது உள்ள மின் தேவை மேல் வரம்பை 112 கிலோ வாட்டிலிருந்து 150 கிலோ வாட்டாக உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வழங்கல் விதி தொகுப்பிலும், மின்சார பகிர்மான விதி தொகுப்பிலும், திருத்தம் அறிவித்துள்ளது. 

இனிமேல் தொழில் மற்றும் இதர மின் நுகர்வோர்கள் தாழ்வழுத்த மின் இணைப்பு 150 கிலோவாட் மின் தேவை வரையில் பெற்றுக் கொள்ளலாம். 112 கிலோ வாட் மற்றும் அதற்கு குறைவான மின் தேவையுடன் தற்போதுள்ள நுகர்வோர்களுக்கு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தாழ்வழுத்த மின் கட்டணங்களும் விதிகளும் தொடரும். 112 கிலோ வாட்டிற்கும் மேல் மின் தேவை உள்ள நுகர்வோர்கள், தாழ்வழுத்த மின் இணைப்பை 150 கிலோ வாட் வரை  பின்வரும் நிபந்தனைகளுடன் பெற்றுக்கொள்ளலாம். தங்கள் வளாகத்திற்குள் மின்மாற்றி அமைப்பதற்கான இடத்தை தர வேண்டும்.  உயர் அழுத்த மின் இணைப்பிற்கான மின் தேவை மற்றும் மின் நுகர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.  மின்மாற்றி அமைப்பதற்கான பொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளை மின் வழங்கும் நிறுவனம் ஏற்கும்.  நுகர்வோர் வளாகத்திற்குள் அமைக்கப்படும் மின்கட்டணத்திற்குண்டான  பொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளை விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும்.

முடிந்த இடத்தில் எல்லாம்  ஒற்றைக் கம்ப வகை மின்மாற்றி அமைப்பை நிறுவி இடத்தையும் செலவையும் குறைக்கலாம். அனுமதிக்கப்பட்ட உச்ச மின் தேவையை மீறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதத் தொகை, கொள்கையளவில் 112 கிலோவாட் வரை உள்ள  நுகர்வோர்களுக்கு 112 கிலோ வாட்டிற்கு மேல் 150 கிலோ வாட் வரை உள்ள நுகர்வோர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கும். 150 கிலோ வாட் உச்ச மின் தேவையை மூன்று முறையோ அதற்கும் மேலோ மீறும் பட்சத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பை உயரழுத்த மின்னிணைப்பாக மாற்ற நுகர்வோருக்கு அறிவிப்பு வழங்கப்படும். இந்தத் திருத்தம் வருவதற்கு முன் உயர் அழுத்த மின் இணைப்பைப் பெற வசதி இல்லாமல் 112 கிலோ வாட் மின் தேவையை மீறி பெரும் தொகையை அபராதமாக கட்டி வந்த நுகர்வோர்கள் இனிமேல் 180 கிலோ வாட் வரை மின் தேவையை கூடுதலாக பெற்று அபராதத்தை தவிர்க்கலாம். 

மின்மாற்றியை மின்தேவை உள்ள நுகர்வோர் இடத்திலேயே அமைப்பதினால் மின் இழப்பு பெருமளவு குறையும். மின் அழுத்தம் சீராகும், மின்கடத்திகளின் நீளம் குறைவதால் உயரழுத்த, தாழ்வழுத்த விகிதம் மேம்படுவதுடன். நுகர்வோர்களுக்கு ஏற்படும் மின்தடைகள் பெருமளவில் குறையும்.  தமிழ்நாடு அரசு நாளிதழில் 1-7-2020 அன்று வெளியிடப்பட்ட மேற்கண்ட திருத்தத்தின் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் www.tnerc.gov.in காணலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் தெரிவித்துள்ளார்.
 

click me!