காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து Go Back Modi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இன்று அது அகில இந்திய அளவில் டுவிட்டர் டரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.
தமிழக மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
அவருக்கு முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர், அது மட்டுமல்லாமல் சைதாப்பேட்டை, கிண்டி , ஆலங்தூர் போன்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன..
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். .
அதே நேரத்தில் கிண்டி அருகே பிதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து Go Back Modi என்று எழுதப்பட்ட கருப்பு பலூனை எதிர்ப்பாளர்கள் பறக்கவிட்டனர்.
இந்நிலையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.