வாயால் மட்டும் சொன்னா போதுமா அமைச்சரே.. செயலில் காட்டுங்கள்... திமுகவை திக்குமுக்காட வைக்கும் கமல்.!

By vinoth kumarFirst Published Aug 1, 2021, 5:55 PM IST
Highlights

அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதுடன் ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பணியிட மாற்றம், பதவி உயர்வு, ஓவர் டூட்டி என அனைத்திலும் நீடிக்கும் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்துத் தொழிற்சங்கங்களும் சமமாக பாவிக்கப்படவேண்டும்.

தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாக போராடி வரும் அரசு போக்குவரத்து பணியாளர்களின் குரலுக்குத் தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை பற்றி அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாக போராடி வரும் பணியாளர்களின் குரலுக்குத் தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும்.

அரசு போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்கான நிலுவை தொகையை உடனடியாக விடுவிப்பதுடன் அனைத்து காலிப்பணியிடங்களையும் நேர்மையாக தேர்வு செய்யப்பட்டவர்களை கொண்டு நிரப்ப தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதுடன் ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பணியிட மாற்றம், பதவி உயர்வு, ஓவர் டூட்டி என அனைத்திலும் நீடிக்கும் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்துத் தொழிற்சங்கங்களும் சமமாக பாவிக்கப்படவேண்டும்.

7 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பஞ்சப்படி உடனடியாக வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவக் காப்பீடு திட்டம், தரமான கேண்டீன், வசதியான ஓய்வெடுக்கும் அறைகள், உடல் நலத்தையும் உள்ள ஆரோக்கியத்தையும் பேணுவதற்கான பயிற்சிகளை அளித்தல் ஆகியவையும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

திமுக ஆட்சி போக்குவரத்துத் தொழிலாளர்களின் பொற்காலமாக அமையும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அதை செயலில் காட்டும் வகையில் நடைபெற இருக்கும் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில் கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

click me!