மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கு எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவெற்றுங்க.. மாஜி அமைச்சர் தங்கமணி.

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2021, 12:49 PM IST
Highlights

மீண்டும் மின்கம்பிகளில் துணி காயப்போடும் சூழ்நிலை வந்துவிட்டதே என்று மக்கள் புலம்புகிறார்கள், மேலும் தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதுடன் டெபாசிட் தொகையையும் செலுத்த சொல்வதாக புகார்கள் எழுந்துள்ளது

மின்சார கட்டணம் கணக்கிடும் முறையை மாதம் ஒருமுறையாக மாற்றி அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மின்சார துறை அமைச்சர் மற்றும் அதிமுக நாமக்கல் மாவட்ட  செயலாளர் தங்கமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:  தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தற்போதைய திமுக ஆட்சியாளர்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அள்ளி வீசிய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் முதன்மையானது வீடுகளுக்கான மின் பயன்பாட்டு கணக்கெடுப்பை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையில் இருந்து மாதம் ஒரு முறையாக மாற்றி அமைக்கப்படும் என்பது தான். 

ஜூலை மாதம் 1ஆம் தேதி எடுக்கவேண்டிய மீட்டர் ரீடிங் மின்வாரிய ஊழியர்களால் எடுக்கப்படவில்லை, சென்ற 2019 மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டண தொகையை செலுத்தும்படி இந்த அரசு தெரிவித்தது. 2019ஆம் ஆண்டு கொரோனா காலம் கிடையாது, அப்போது கோடை காலம், பொதுமக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தினர். அதே கட்டணத்தை இப்போதும் கட்ட சொல்லவே மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்தார்கள். அனால் 2020 இல் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டபோது, அப்போதைய முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அம்மாவின் அரசு 2020 ஜனவரியில் என்ன கட்டச் சொல்லி இருந்தார்களோ, அந்த கட்டணத்தை கட்ட சொல்லியது, ஆனால் தற்போதைய திமுக அரசு கொரோனா ஊரடங்கால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், 2019 மார்ச் மாதம் மின்சார கட்டணத்தை 2021ல் கட்ட சொல்லவே தமிழக மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்தார்கள். 

கொரோனா ஊரடங்கால் குறைவான மின்சாரம் உபயோகப்படுத்தி இருந்தாலும் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய தினசரி நாளிதழ்களில் கூட அதிகப்படியாக விதிக்கப்பட்ட மின் கட்டணத்தால் பெண் தற்கொலை முயற்சி என்ற செய்தி வெளி வந்துள்ளன, சென்னை மாதவரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் திரு.கௌதமன் அவரது மனைவி திருமதி கருமாரி அவரது இரண்டு வீட்டிற்கு மின் கட்டண 36 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று மாதாவரம் மின்வாரியம் தெரிவித்ததாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாகவும் தற்போது அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன. சென்னை போன்ற பெருநகரங்களில் குத்துமதிப்பாக ஒரு கணக்குப் போட்டு மின் வாரியத்தால் ஆன்லைன் மூலம் பில் அனுப்பப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இதைவைத்து அதிக மின்சாரத்தை பயன்படுத்தியதாக டெபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று செய்திகள் வருகின்றன. 

அன்றைய திமுக ஆட்சி காலத்தில் இருண்ட தமிழகமாக இருந்ததை ஒளிமிகுந்த தமிழகமாக அம்மாவின் ஆட்சியும், அம்மாவின் அரசும் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றியது, மின் பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திய தமிழக மக்களை இந்த இரண்டு மாத கால திமுக ஆட்சி மீண்டும் இருளில் தள்ளியுள்ளது. இன்வெர்ட்டர் உபகரணத்தை வாங்க வேண்டிய சூழ் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அம்மாவின் ஆட்சி காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை தற்போதைய திமுக ஆட்சியாளர்கள் செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி திண்டுக்கல், மதுரை, உட்பட பல மாவட்டங்களில் பல மணி நேரம் பகலிலும் இரவிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி படுகிறார்கள்.மீண்டும் மின்கம்பிகளில் துணி காயப்போடும் சூழ்நிலை வந்துவிட்டதே என்று மக்கள் புலம்புகிறார்கள், மேலும் தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதுடன் டெபாசிட் தொகையையும் செலுத்த சொல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. 

ஊரடங்கு காலத்தில் மக்கள் உரிய வருமானமின்றி தவித்து வரும் சூழ்நிலையில், இது போன்ற பொருளாதார சுமையை ஏற்படுத்துவது மேலும் தமிழக மக்களை பாதிப்படையச் செய்துள்ளது. மின்சார வாரியத்தின் இத்தகைய நிர்வாகத்திறனற்றச் செயல்களை வன்மையாக கண்டிப்பதுடன், உரிய கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கு எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும், ஆகஸ்ட் மாதம் முதல் மாதந் தோறும் மீட்டர் ரீடிங் எடுக்கும் வகையில் மின்சார வாரியத்திற்கு இந்த அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். இல்லையெனில் மின்வெட்டும் அதிக மின் கட்டணம் செலுத்த இயலாத தவிக்கும் மக்களின் கோபக் கனலுக்கு இந்த அரசு ஆளாகும் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!