ரேஷன் கடைகள் மூலம் இலவச மாஸ்க்... எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 2, 2020, 2:59 PM IST
Highlights

கொரோனாவை தடுக்க ரேசன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

கொரோனாவை தடுக்க ரேசன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. இந்த 4 மாவட்டங்களில் தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுப்பரவல் அதிகம் உள்ள மண்டலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மண்டல வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனாவை தடுக்க அதிகளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.80 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் 23,495 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 13,170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் 2 லட்சத்து 71 ஆயிரம் பிசிஆர் கருவிகள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு இதுவரை 12.56 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. தமிழகத்தில் பரிசோதனைகள் முறைப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றன. விலையில்லா சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சென்னையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா விவகாரத்தில் என்னை நான் முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. அனைத்துப் பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு. வென்டிலேட்டர் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் கொரோனா முற்றவில்லை. கொரோனாவை தடுக்க ரேசன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்படுகிறது’’என அவர் தெரிவித்தார்.
 

click me!