விமான டிக்கெட்டில் ஊழல் செய்த MGR பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.. சரணடைந்தால் ஜாமின், நீதிமன்றம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2020, 4:12 PM IST
Highlights

 எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

விமான டிக்கெட் முறைகேடு புகாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் சரணடைந்தால் மட்டுமே ஜாமீன் குறித்து முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை துணைவேந்தராகப் பணியாற்றியவர் மீர் முஸ்தபா உசைன். இவர், துணைவேந்தராகப் பணியில் இருந்தபோது 2008 மே மாதம் வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் விமானத்தில் சென்றுள்ளார். இதற்காக உயர் வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு விமானக் கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.  இதன் பின்பு, இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு சாதாரண இருக்கையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மீர் முஸ்தபா உசைன் சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டில் பயணம் செய்துவிட்டு, உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாகக் கூறி மோசடி செய்து, 2 லட்சத்து 22 ஆயிரத்து 332 ரூபாய் பணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாகப் பெற்றுள்ளதாகவும்,
இதேபோன்று பிரிட்டிஷ், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்று வந்த வகையில் டிக்கெட் கட்டணமாக 7 லட்சத்து 82 ஆயிரத்து 124 ரூபாயை பல்கலைக்கழகத்தில் இருந்து மீர் முஸ்தபா உசைன் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி மீர் முஸ்தபா உசைன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீர் முஸ்தபா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விமானக் கட்டணத்திற்கான அந்த வித்தியாசத் தொகையை துணைவேந்தர் செலுத்தி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், விசாரணையில் குளறுபடிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்றும்,  துணைவேந்தர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தால், அடுத்த நாளே ஜாமினில் விடுவிக்க உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். இது குறித்து மனுதாரரிடம் கலந்தாலோசித்து பதில் தெரிவிப்பதாக  தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணை வருகிற 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

 

click me!