தன் மீதான வழக்குகளை ரத்து செய்யகோரிய மனு.. எஸ்.பி.வேலுமணியை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிய உயர்நீதிமன்றம்.!

By vinoth kumarFirst Published Sep 19, 2022, 12:24 PM IST
Highlights

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.  அவற்றில் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன 

தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு நாளை விசாரணை செய்யப்படுகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் தமிழக அரசின் முறையீட்டை ஏற்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. 

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.  அவற்றில் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன.

 

பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை மற்றும் கோவை பிரிவுகளால் தலா ஒரு வழக்கு என 2021, 2022ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டது. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் இந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில்  தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என அளித்த அறிக்கையை மீறி அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், இந்த மனுவை ஒற்றை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கக்கூடிய ராஜு என்பவர் ஆஜராகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ராஜு அளித்த விளக்கத்தில், மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆஜராகி வருவதாக தெரிவித்தார். மேலும், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொது நல வழக்குடன், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த குற்றவியல் பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சேர்த்து தான் விசாரிக்கபட்டன என்பதால், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள குற்றவியல் மனுவை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என்று கூறி விசாரணையை இன்று தள்ளிவைத்து இருந்தனர்.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள் நாளை வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

click me!