யாரையும் கூட்டணியில் பிடித்து வைக்க முடியாது.! ஆதரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது- செல்லூர் ராஜூ

By Ajmal KhanFirst Published Jan 30, 2023, 8:38 AM IST
Highlights

எடப்பாடி தரப்பை தான் அதிமுக என மக்கள் நினைக்கின்றனர், இரட்டை இலை சின்னம் கிடைக்கவே காத்துக்கொண்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பாலு பேச்சு முறையற்றது

மதுரை கோச்சடை பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் தனது மகன் தமிழ்மணி நினைவாக இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மனைவி மற்றும் மகன்களுடன் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு தேர்தலில் குழப்பமே இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம். ஓபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பேன் எனக்கூறியது குறித்த கேள்விக்கு, எல்லோரும் ஜனநாயக முறைப்படி அவரவர் அறிவிக்க உள்ளார்கள். மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர். மக்கள் தான் எஜமானர்கள் மக்கள் தான் தலைவர்கள் மக்கள் பார்த்து யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். மூத்த மத்திய அமைச்சராகவும் திமுகவின் பொறுப்பு மிக்க தலைவராகவும் இருக்கும் டி ஆர் பாலு வன்முறையை கையில் எடுக்கும் வகையில் பேசுவது முறையல்ல. ஆசிரியர் வீரமணிக்கு டி.ஆர்.பாலு குறிப்பிட்டது போல எதுவும் நடக்கவில்லை.

 இரட்டை இலை எங்களுக்கு தான்

டி.ஆர்.பாலுவின் பேச்சு கண்டிக்கத்தக்கது. டி.ஆர்.பாலுவின் பேச்சு திமுக எவ்வளவு வன்முறை எண்ணம் நிறைந்தது என்பதை காட்டுகிறது. அப்பாவுக்கு துணையாக அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்லிவிட்டு தற்போது மூத்த அமைச்சர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு கப்பம் கட்டுவது போல கட்டிக் கொண்டுள்ளனர். இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். சின்னம் கிடைக்காததால் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று சொல்வது தவறு, நீதிமன்றம் ஏற்கனவே எங்களுக்கு சாதகமாக கூறிவிட்டது. எந்த சந்தேகமும் வேண்டாம். எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காகத்தான் நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். மக்கள் எங்களைத்தான் உண்மையான அதிமுக என நினைக்கின்றனர். 20 மாத திமுக ஆட்சியில் எண்ணற்ற துயரங்களை சந்தித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

தேடிப்போய் அழைக்கவேண்டியதில்லை

தேடிப் போய் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய நிலை நிச்சயமாக இல்லை. ஒரு அண்ணன் தம்பிக்குள் பிரிவு வருகிறது. சின்ன கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதன் காரணமாக ஏற்கனவே உள்ள நண்பர்களை சென்று பார்ப்பதில் தவறு ஏதுமில்லை. யாரையும் கூட்டணியில் பிடித்து வைக்க முடியாது. எங்களை ஆதரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. நாங்கள் யாருக்கும் எஜமானர்கள் இல்லை. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. எங்கள் கூட்டணியில் உள்ள நண்பர்களை நாங்களாக விலக்கியது கிடையாது.

இவிகேஎஸ் தேர்தலில் போட்டியிடுவது ஏன்.?

இடைத்தேர்தல் சாக்கடை தேர்தல் எனவும், அதில் எல்லாம் நிற்க மாட்டோம் என ஒரு காலத்தில் பேசிய இளங்கோவன், தற்போது எதற்காக தேர்தலில் நிற்கிறார் என தெரியவில்லை. திமுக ஆட்சியில் இருப்பதால் தன்னை கரை சேர்ப்பார்கள் என நினைத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிற்கிறாரா என தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை எங்களுடைய எதிரிகளையே எங்களால் பார்க்க முடியவில்லை.இடைத்தேர்தலில் ஜனநாயகம் தான் வெல்லும். பணநாயகம் வென்றதாக சரித்திரம் இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கை,கால்களை வெட்டுவேன், கொலை செய்வேன் என ரவுடிகள் போல் செயல்படும் திமுக அமைச்சர்கள்- ஸ்டாலினை விளாசும் பாஜக


 

click me!