ஈஷா யோகா மைய விவகாரம்… வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்ய முடிவு… வனத்துறை அமைச்சர் அதிரடி!!

By Narendran SFirst Published Dec 24, 2021, 3:50 PM IST
Highlights

ஈசா யோக மையம் தொடர்பாக தற்போது வருவாய்த்துறையினர் மூலம் அளவீடு செய்ய உள்ளதாகவும் அதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வந்த பின் முடிவு எடுக்கப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

ஈசா யோக மையம் தொடர்பாக தற்போது வருவாய்த்துறையினர் மூலம் அளவீடு செய்ய உள்ளதாகவும் அதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வந்த பின் முடிவு எடுக்கப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வனப்பரப்பு 23.98 சதவீதமாக உள்ளது. இதை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக விரிவுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்டத்திலுள்ள பொது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக கூட்டம் நடைபெறுகின்றது.

ஆறு மற்றும் நீர் நிலைகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். ஈசா யோக மையம் தொடர்பாக தற்போது வருவாய்த்துறையினர் மூலம் அளவீடு செய்ய உள்ளோம். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை வந்த பின் முடிவு எடுக்கப்படும். உலக அளவில் எந்த விதமான இயற்கை பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வனப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கையை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.எனவே, ஒவ்வொரு ஆண்டும் 2.65 கோடி மரங்களை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளில் 33 சதவீதப் பரப்பளவில் வனமாக்கலாம். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வனத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, கல்வித் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், வனத் துறை, வேளாண் துறை மூலம் மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளில் மரக்கன்றுகளை நடலாம். இதுபோல, தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் மரக்கன்றுகளை நட்டால், 7 கோடி மரங்களாகும். இது தொடர்பாகப் பள்ளிகளில் மாணவர்களிடையே ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இத்துறையில் 10 ஆண்டுகளாக இருந்தவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றது. ஊருக்குள் குரங்குகள் வருவதைத் தடுப்பது தொடர்பாகக் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல, மயில், காட்டுப்பன்றிகள் வருவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

click me!