
ரவுடிகளை வைத்து என்னையும் பன்னீர்செல்வத்தையும் தீர்த்து கட்ட டி.டி.வி தினகரன் துடிக்கிறார் என ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகிறார்.
ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான மனுதாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுக சசிகலா தரப்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் வழக்கறிஞர் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும், பா.ஜ.க சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரனும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபாவும் என பலமுனை நிலவுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் அதிமுக - திமுக போட்டியை விட, அதிமுக உட்கட்சிக்குள்ளேயே கடுமையான போட்டா போட்டி நிலவி வருகிறது.
தற்போது பொறுமையை கட்டவிழ்த்த சசிகலா தரப்பு தங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டுவதாக ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், டிடிவி தினகரனுக்கு எதிராக போட்டியிட கூடாது, போட்டியிட்டால் தினகரன் தொலைத்து கட்டிவிடுவார் என கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரவுடிகளை வைத்து என்னையும் பன்னீர்செல்வத்தையும் தீர்த்து கட்ட டி.டி.வி தினகரன் திட்டமிட்டு வருகிறார் என ஆதரவாளர்களிடையே புலம்பி வருகிறாராம் மதுசூதனன்.
மேலும், காவல் ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், வடசென்னையில் உள்ள முக்கிய ரவுடிகளை வெளியே கொண்டு வந்து வாக்குசாவடிகளை சூறையாட டி.டி.வி முயற்சி செய்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே திமுக மட்டுமே எங்களுக்கு எதிரி என கூறி வந்த டி.டி.வி தினகரன் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் இறங்கி விட்டாரா என்ற கேள்வி அதிமுகவினரிடையே வெகுவாக எழுந்துள்ளது என்றே கூறலாம்.