கடல் வளத்தை அழிக்காதிங்க... எங்க வாழ்வாதாரத்தை பாதுகாக்க என்ன செஞ்சிங்க!? மீனவ மக்களால் திணறிய கடற்கரை!

First Published Apr 7, 2018, 3:41 PM IST
Highlights
fishermen conducts seige protest at sea side of Kovalam and Manakudi


கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவளம் முதல் மணக்குடி வரையிலான மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ மணக்குடி முதல் கோவளம் வரை உள்ள பகுதியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.வர்த்தகத் துறைமுகத்தால் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சரக்கு பெட்டக துறைமுகம் அமைய உள்ள கோவளம் முதல் மணக்குடி வரையிலான கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் துறைமுகம் அமைக்க தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். மீனவர்கள் பைபர் படகுகளில் கடலில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் கறுப்புக்கொடிகளைக் கட்டியபடி மீனவர்கள் கோவளம் கடற்கரை பகுதியில் திரண்டுள்ளனர்.

மேலும், மீனவர்கள் கடற்கரை மணற்பரப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மீனவர்கள் மீன்பிடிக்கப்போகாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி கடல் பகுதி முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது.

வர்த்தக துறைமுகம் அமைத்து கடல் வளத்தை அழிப்பதற்கு பதிலாக மீன்பிடி துறைமுகம் அமைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கடலில் மீன் பிடிக்கும் இந்த தொழிலை நம்பி சுமார் 80 சதவீத மீன்கள் ஏற்றுமதி இந்தப் பகுதியில் இருந்து நடைபெற்று வரும் நிலையில் சரக்கு பெட்டக வர்த்தக துறைமுகத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிப்பது ஏன்? கண்ணீரோடு கதறுகின்றனர்.

மீனவர்கள் கடலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடலோர காவற்படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

click me!