
தூத்துக்குடியை அடுத்த ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் அருகே அரசு பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் கடும் மோதல் ஏற்பட்டது. பல்வேறு அரசு வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் எரிக்கப்பட்டன. மேலும் ஆட்சியர் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர்.
இதனை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது. துப்பாக்கிசூடு தகவல்கள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்கும் வண்ணம் இணையதள சேவை முடக்கப்பட்டது.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும், பலியானவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கே.கே.ரமேஷ், முத்துக்குமார், அழகர்சாமி உள்ளிட்ட 8 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடியில் பதற்றம் நிலவியதால் அங்கு இணையத்தை முடக்கியது ஏற்புடையது. ஆனால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்கடிளல் இணையதள சேவை முடக்கத்தை தமிழக அரசு ரத்து செய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே தற்போது இணைய சேவை ரத்து தொடர்கிறது. தற்போது தூத்துக்குடியில் பதற்றம் மிகுந்த பகுதியான அண்ணா நகர் மற்றும் பிரையண்ட் நகர் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டு கண்காணிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்கடியில் அரசு பேருந்து ஒன்று து வைக்கப்பட்டுள்ளது. உடன்குடியில் இருந்து நெல்லை சென்ற அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் இது நடந்துள்ளது. போராட்டம் நடைபெறும் தூத்துக்குடி மாவட்டத்தை தாண்டியும், திருச்செந்தூர் - உடன்குடி சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.