
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல்வேறு தரப்பினர் அமைதியான முறையில் போராடி வந்தனர். இதன் 100 வது நாள் போராட்டத்தில் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீஸார் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.இதனால் 13 பேர் பலியாகியுள்ளனர்.
இச்செயல் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினரும் மக்களும் பல்வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நடந்த துப்பாக்கி சூடு குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் கேட்டிருந்தது.
இதில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியது ஏன்? போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன? இத்தனை பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தமிழக உளவுத்துறை முன்கூட்டியே அறியாமல் இருந்தது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் அந்த அறிக்கை விரிவானதாக இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசின் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதால் அறிக்கை விபரங்களை வெளியிட முடியாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.