விவசாயிகள் போராட்டம் 130 கோடி மக்களின் உரிமைக்கானது..தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டும்.. மதுரை எம்.பி ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 18, 2020, 1:30 PM IST
Highlights

திமுகவின் தலைவரை பார்த்து தமிழகத்தின் முதலமைச்சர் இடைத்தரகர் என்று குறிப்பிடுகிறார். யார் இடைத்தரகர்கள் ? கொரோனாவால் இந்த நாடே திணறிக் கொண்டிருந்த பொழுது இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள். 

இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, மாநில சுயாட்சியின் பிரச்சனை. சுயமரியாதை உள்ளவர்கள் போராடுகிறார்கள், சுயமரியாதை என்றால் என்ன விலை ? எனக் கேட்பவர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு இந்த சட்டத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் கண்டித்துள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணா விரத போராட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது: 

திமுகவின் தலைவரை பார்த்து தமிழகத்தின் முதலமைச்சர் இடைத்தரகர் என்று குறிப்பிடுகிறார். யார் இடைத்தரகர்கள் ? கொரோனாவால் இந்த நாடே திணறிக் கொண்டிருந்த பொழுது இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள். மக்களவையில் இந்த சட்டம் நிறைவேறிய பொழுது நள்ளிரவு 12 மணி ; மாநிலங்களவையில் இந்த சட்டத்தை ஓட்டெடுப்பை நடத்தாமல் ஓட்டெடுப்பு நடத்தியதாக அறிவித்தீர்கள். ஜனாதிபதி கையெழுத்திட்டது ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27-ஆம் தேதி.‌ பெருந்தொற்றுகாலத்தில் அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை கையெழுத்துப் போட்டு சட்டத்தை நிறைவேற்றிய நீங்கள் இடைத்தரகர்களா? நாங்கள் இடைத்தரகர்களா? இந்தியாவில் மோடியும் , எடப்பாடியும் இருக்கும் வரை இன்னொரு இடைத்தரகர் உருவாகவே முடியாது என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். 

இந்த மூன்று சட்டங்களும் 18 பக்கம் ஆனால் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு இந்த சட்டத்தில் நாங்கள் என்னவெல்லாம் திருத்தம் செய்கிறோம் மாற்றம் செய்கிறோம் என்று அனுப்பியிருக்கிற கடிதம் 19 பக்கம் . 18 பக்கம் சட்ட திருத்தம் செய்த உன்னையே 19 பக்கம் கடிதம் எழுத வைத்த பெருமை இந்த நாட்டினுடைய விவசாயிகளுக்கும் , அரசியல் இயக்கங்களுக்கும் உண்டு. போராடுபவர்களை பார்த்து அவர்கள் சொல்லுகிறார்கள்‌ போராடுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ; போராடுபவர்கள் பாகிஸ்தான், சீனா ஏஜென்ட்கள் ; இன்னும் சொல்லப்போனால் போராடுகிறவர்கள் நக்சலைட்டுகள் எனச் சொல்கிறார்கள். இந்த நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட பொழுது போராடியவர்களை தீவிரவாதிகள் என்றான், அதே போன்ற கொள்ளைக்காரர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு போராடுகிற நம்மைப் பார்த்து தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்கிறார்கள். 

உழவர்களுக்கு எதிராக; மாநில உரிமைகளுக்கு எதிராக; 130 கோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இன்றைக்கு நமது இந்தியாவின் விவசாய சந்தையின் மதிப்பு ஒரு வருடத்திற்கு 16 லட்சம் கோடி. அதை அதானிக்கும், அம்பானிக்கும் கொடுத்து பல லட்சம் கோடியை கொள்ளை அடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த துடிப்புக்கு எதிராக மக்களுடைய பேரெழுச்சி இந்த சட்டங்களை பின் வாங்க வைக்கும் . அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு உச்சநீதிமன்றம் போராட்டத்திற்கு செவிமடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்து இந்தியாவின் டெல்லியில் சிங்கு எல்லையில் மட்டும் 18 கிலோ மீட்டருக்கு விவசாயிகள் டென்ட் அடித்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் . 

அங்கே துவங்கி இங்கே வரை ; கனடாவில் துவங்கி வள்ளுவர் கோட்டம் வரை உலகம் முழுவதும் இன்று சட்டத்திற்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலே சிறந்த முறையில் தமிழகம் அளித்த பங்களிப்பு நாம் செய்துகொண்டிருப்பது. மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் சொல்கிறேன்; நாடாளுமன்றத்தில் பஞ்சாப்பிற்கு அடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக கர்ஜித்த முழக்கம் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழக்கம். எங்கள் தமிழகத்தின் தலைவர்கள் காட்டிய வழியிலே நாடாளுமன்றத்தில் நள்ளிரவு  12:30 மணிவரை இருந்து , இந்த சட்டத்திற்கு எதிராக போர் முழக்கத்தை பதிவு செய்தோம் . விவசாயிகளின் உரிமையை ,எங்கள் மாநிலத்தின் உரிமையை ,130 கோடி மக்களின் உரிமையை போதும் தாழவிட மாட்டோம் என்பதற்கு மீண்டும் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டும் வழிகாட்டும். இவ்வாறு அவர் பேசினார். 

 

click me!