வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் குடும்ப ஓய்வூதிய விவகாரம்..!! நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட தமிழக எம்.பி.

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2020, 11:03 AM IST
Highlights

வங்கி ஊழியர்கள் அதிகாரிகளின் குடும்ப ஓய்வூதியம் மிக மிகக் குறைவாக உள்ளது. இதை மத்திய அரசு ஊழியர்கள்/ ரிசர்வ் வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கு இணையாக உயர்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கோரி வருகின்றனர். 

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் குடும்ப ஓய்வூதிய அதிகரிப்பு சம்பந்தமாக சு.வெங்கடேசன் எம்.பி நாடாளுமன்றத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் ஓய்வூதிய அதிகரிப்பு குறித்த பரிந்துரை அரசின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய வங்கியாளர் சங்கம், சங்கங்களிடம் தெரிவித்திருந்தது. ஆக  அப்பரிந்துரை அரசுக்கு வந்துள்ளதா? அப்படி வரப் பெற்றிருந்தால் அதன் தற்போதைய நிலை என்ன? என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் தாகூர், வங்கி சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் குடும்ப ஓய்வூதிய அதிகரிப்பு குறித்து ஓர் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக இந்திய வங்கியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளதுஎனத்தெரிவித்துள்ளார். 

அதுபோல வங்கிக்கு ஒத்த பிற நிறுவனங்களில் உள்ளது போன்று ஐந்து நாள் வார வேலையை வங்கிகளில் அமலாக்குவது அரசின் பரிசீலனையில் உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், மாற்றத்தக்க செலாவணி முறிச்சட்டம் 1881 ன் கீழ் பிரிவு 25 அளித்துள்ள அதிகாரத்தின் படி 20.08.2015 அன்று மாதத்தின் இரண்டாவது, நான்காவது சனிக் கிழமைகளை முழு விடுமுறை நாட்களாக அரசு அறிவித்தது. அதை மாற்றும் யோசனை ஏதும் அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள எம்.பி வெங்கடேசன், வங்கி ஊழியர்கள் அதிகாரிகளின் குடும்ப ஓய்வூதியம் மிக மிகக் குறைவாக உள்ளது. இதை மத்திய அரசு ஊழியர்கள்/ ரிசர்வ் வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கு இணையாக உயர்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கோரி வருகின்றனர். 

இந்திய வங்கிகள் சங்கம் 2020 ஜூலை 22 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்ப ஓய்வூதியத்தை எந்த உச்ச வரம்பும் இல்லாமல் அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தின் 30 சதவீதமாக உயர்த்துவதாக ஒப்புக்கொண்டது. இதுகுறித்து மத்திய அரசாங்கத்திற்கு பரிந்துரைத்து இருப்பதாகவும் தெரிவித்தது. இது மரணம் அடைந்த பல வங்கி ஊழியர் குடும்பங்களின் இன்னல்களுக்கு ஓரளவு நிவாரணம் தரக் கூடியது என்பதால் இந்திய வங்கியாளர் சங்கத்தின் பரிந்துரை விரைவில் பரிசீலிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும்; பேச்சு வார்த்தையில் கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ள பின்னணியில் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

click me!