அதிமுக சார்பில் கேட்கிறேன்.. ஒரே ஒரு வாரம் டைம் கொடுங்க.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Aug 6, 2022, 10:01 AM IST
Highlights

2022- 23 ஆம் ஆண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம்  தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

2022- 23 ஆம் ஆண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம்  தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆண்டுதோறும் தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்த மாணவ மாணவியர் இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 4-7-2022  காலை 10 மணி முதல் 9-7-2022  மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் பயிலும் மாணவ மாணவியர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் உதவியுடன் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த பயிற்சியில் சேர ஏராளமான கிராமப்புற மாணவ மாணவியர் ஆர்வத்துடன் இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர். இருப்பினும் மேற் குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பாலான மாணவ மாணவியர் விண்ணப்பிக்காத சூழ்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 13-7-2022  வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நீட்டிப்புக்குப் பிறகும் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை மாணவ-மாணவியருக்கு ஏற்பட்டதாகவும் இதற்கு காரணம் இணைய இணைப்பு அதாவது நெட்வொர்க்  கனெக்சன் இல்லாததுதான் என்றும் மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளிக்கும் பட்சத்தில் அனைத்து மாணவ மாணவியரும் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும் என்றும் இந்த பயிற்சியை ஆர்வமுடன் பயில உள்ள மாணவ மாணவியரும் அவர்களது பெற்றோர்களும் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இவர்களுடைய  கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டிய கடமை தமிழக அரசாங்கத்திற்கு உள்ளது எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்படி கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொண்டு ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகள் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!