அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் இதை செய்ய வேண்டும், தேர்தல் களத்தில் வேகமெடுத்த டிடிவி தினகரன்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 16, 2020, 1:14 PM IST
Highlights

ஒவ்வொரு கழக  உடன்பிறப்பு தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்காளர்களை சேர்ப்பதில் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். மிக முக்கியமான இந்தப் பணியை அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட கழக செயலாளர்கள் முழுவீச்சில் ஒன்றிணைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பதுடன் அதன் தொடர்ச்சியாக நடைபெற உள்ள வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் கழகத்தினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

தமிழகம் முழுவதற்குமான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது, அந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கழகத்தினர் தாமதமின்றி முறைப்படி பெற்று அதனை வாக்குச்சாவடி வாரியாக சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கிற வழிகாட்டுதலின்படி செயல்படுத்திட வேண்டும். மேலும் இதன் தொடர்ச்சியாக கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்க 21-11-2020, 22-11-2020 மற்றும் 12-12-2020,  13-12-2020 ஆகிய நாட்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்நாட்களில் கழகத்தினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தேவையான கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் புதிய வாக்காளர்களை  சேர்த்திட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பினை  சரியாகவும் அக்கறையுடன் பயன்படுத்திக்கொண்டு அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கிளை வார்டு உள்ளிட்ட கழக பகுதிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல் மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு கழக  உடன்பிறப்பு தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்காளர்களை சேர்ப்பதில் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். மிக முக்கியமான இந்தப் பணியை அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட கழக செயலாளர்கள் முழுவீச்சில் ஒன்றிணைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

click me!