ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பஸ்- ரயில்களை விடக்கூடாது... பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்..!

By Thiraviaraj RMFirst Published Apr 11, 2020, 2:01 PM IST
Highlights

முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும், தமிழகமும் உள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால் கூட, ரயில் அல்லது சாலை என எந்த வகையான போக்குவரத்தையும் அனுமதிக்கக்கூடாது

நாடு முழுவதும் ஏப்ரல்- 30ம் தேதி வரை மத்திய அரசே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் அனைத்து மாநில முதல்வர்களும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து ஆலோசித்தனர். தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவை வரும் செவ்வாய்கிழமையுடன் தளர்த்த வேண்டுமா அல்லது நீட்டிக்க வேண்டுமா, வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியிடம், ’’மாநிலங்களே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தால், அது எந்த பலனையும் தராது. அதனால், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும், தமிழகமும் உள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால் கூட, ரயில் அல்லது சாலை என எந்த வகையான போக்குவரத்தையும் அனுமதிக்கக்கூடாது" என்று கெஜ்ரிவால் வலியுறுத்தினார். நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளைக் கையாள்வதைத் தவிர்த்து அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒடிசா மற்றும் பஞ்சாபில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறும்போது, ’’இது, கடந்த நூற்றாண்டுகளில் மனித இனம் பார்த்திராத அளவு மிகப்பெரும் அபாயமாகும். வாழ்க்கை எப்போதும் ஒரே போன்று இருக்காது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

24x7 நான் இருக்கிறேன். எந்த மாநில முதல்வரும், என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கலாம். நாம் தோளோடு தோளாக ஒன்றாக நிற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கான்பரன்ஸ் நடந்த போது சுகாதார அமைச்சகம் ஒரு விளக்கக்காட்சியை திரையிட்டது. பின்னர் ஒவ்வொரு மாநில முதல்வர்களாக பிரதமர் மோடியுடன் பேசினர்.

click me!