மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை பெற்ற அஸ்ட்ராஜெனேக தடுப்பூசி..!! கொரோனாவுக்கு விரைவில் சமாதி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 18, 2020, 3:52 PM IST
Highlights

தடுப்பூசி சோதனையில் ஒரு தன்னார்வலரின் முதுகெலும்பில் கடுமையான வீக்கம் ஏற்பட்டதால், செப்டம்பர் 6 ஆம் தேதி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் சோதனை நிறுத்தப்பட்டது. பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டதையடுத்து

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தடுப்பூசி பரிசோதனை இடையில் நிறுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அது தன்னார்வலரின் உடல் இயல்பாக ஏற்பட்ட உடல் நல குறைவு என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உள்ளது. 180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டும், வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. பிரத்தியேக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்களும், அஸ்ட்ராஜெனேக என்ற மருத்துவ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அதற்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை நடைபெற்று வருகிறது, இந்நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்டது.  இதனை அடுத்து தடுப்பூசி பரிசோதனை பாதில் நிறுத்தப்பட்டது. சில பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறியது. 

உலக அளவில் மருத்துவ பரிசோதனைகளில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவது சகஜமான ஒன்று தான் எனவும், மருந்து செலுத்தப்பட்டவருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆராயப்படும் என்றும் அஸ்ட்ராஜெனேக மருந்து நிறுவனம் தெரிவித்தது. அதே நேரத்தில் விரைவில் மூன்றாவது கட்ட பரிசோதனை தொடங்கும் என்றும் கால விரயம் இன்றி  பரிசோதனையை செய்து முடிக்க முயற்சிக்கப்படும் எனவும்  அஸ்ட்ராஜெனேக கூறுயுள்ளது. இந்நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி மருந்தை மீண்டும் பரிசோதனை செய்யலாம் என பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல்  நலம் பாதிக்கப்பட்டவர் குணம் அடைந்துள்ளதாகவும் அதில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்பதாலும், மீண்டும் பரிசோதனையை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது. 

அதாவது தடுப்பூசி சோதனையில் ஒரு தன்னார்வலரின் முதுகெலும்பில் கடுமையான வீக்கம் ஏற்பட்டதால், செப்டம்பர் 6 ஆம் தேதி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் சோதனை நிறுத்தப்பட்டது. பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டதையடுத்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா ஆகியவை பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டன. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை ஆக்ஸ்போர்ட் நிறுவனம் அனைத்து தன்னார்வலர் களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. அதை ஒரு தன்னார்வலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தன்னார்வலர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை செய்யப்பட்டதில், தன்னார்வலர்களின் பிரச்சினைக்கு எந்த வகையிலும் தடுப்பூசி காரணம் இல்லை. அதேபோல தடுப்பூசி காரணமாகத்தான் தன்னார்வலர்களின் உடல்நலம் மோசமடைந்தது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

click me!