ஜனநாயக படுகொலை.. சோதனை என்ற பெயரில் டார்ச்சர் செய்கிறார்கள்.. ஆளுங்கட்சி மீது புகாரை அடுக்கும் சி.வி.சண்முகம்

By vinoth kumarFirst Published Feb 16, 2023, 6:44 AM IST
Highlights

 ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்த நாள் முதல் ஜனநாயக படுகொலை நடக்கிறது என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் தன்னுடை வெற்றியாகவே திமுக பார்க்கிறது. ஆகையால், அதிமுக, திமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திமுக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் பெருவரியான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைப்பது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியான அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என திமுக அமைச்சர்கள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டாக மாற்ற அதிமுகவினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதனால், ஈரோடு தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. 

இதையும் படிங்க;- Erode East Election : பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா.? எடப்பாடி பழனிசாமி அதிரடி !

இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.பி.யுமான சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் மோசடியாக வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அந்த வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் நீக்கப்பட வேண்டியவர்கள். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார். 

தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க திமுகவின் தேர்தல் பிரிவாக கைக்கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் திமுக கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு சேகரிக்க உரிமை உண்டு. அந்த ஜனநாயகம் இங்கு மறுக்கப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சி வேட்பாளர் மட்டும் சுதந்திரமாக வாக்கு கேட்கிறார். எதிர்க்கட்சியான எங்களை வாக்காளர்களை சந்திக்க விடுவதில்லை என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  21 மாத திமுக ஆட்சி.? எடப்பாடி அலை வீசுது.! துணிவுடன் தேர்தலை சந்திக்கும் அதிமுக - ‘கலகல’ செல்லூர் ராஜு

மேலும், தி.மு.க. சார்பாக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார். வாக்காளர்களை ஒவ்வொரு பூத்துக்கு அழைத்து சென்று 3 வேலை உணவு கொடுத்து ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இரவில் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். திமுகவினர், காவல் துறையினர் சேர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை என்ற பெயரில் காவல்துறை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார்.

click me!