ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமம்.. அம்மா உணவகம் தாக்குதலால் கொந்தளித்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்..!

By Asianet TamilFirst Published May 4, 2021, 9:13 PM IST
Highlights

பசிப் பிணி நீக்கிய அட்சய பாத்திரமான அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 

சென்னை முகப்பேரில் திமுகவை சேர்ந்த இருவர், அந்தப் பகுதியில் இருந்த அம்மா உணவகத்தில் புகுந்து ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பெயர் அம்மா உணவகத்துக்குள் புகுந்து பெயர் பலகைகளையும் வெளியே எடுத்து வந்து சாலையில் எறிந்தனர். வெளியே இருந்த போர்டுகளையும் பிடுங்கி எறிந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி சர்ச்சையானது. ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பே திமுகவினர் அட்டகாசம் செய்ய தொடங்கிவிட்டனர் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. 
இதனையடுத்து ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அதில், “சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த, மக்களுக்கான அம்மா உணவகம் திட்டத்தின் சிறப்பை உணர்ந்து இன்றளவும் அண்டை மாநிலங்கள் தொடங்கி அயல்நாடுகள் வரை இத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன. பெருமழை, பெருவெள்ளம் தொடங்கி கொரோனா பேரிடர் காலங்கள் வரை உணவின்றி தவித்தோரின் பசிப் பிணி நீக்கிய அட்சய பாத்திரம் அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும். ஜெயலலிதா படத்தினை சேதப்படுத்தி உள்ளதும் வேதனை அளிக்கிறது. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைப்போர் மீது உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிக்கையில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

click me!