தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.! ஆளுநர் ரவியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.! எடப்பாடி பழனிசாமி

By Ajmal KhanFirst Published Nov 23, 2022, 3:34 PM IST
Highlights

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக கூறிய எடப்பாடி பழனிசாமி,   திமுக, ஆளுநரை விமர்சிப்பது வாடிக்கையான ஒன்றுயென தெரிவித்துள்ளார்.

ஆளுநரை சந்தித்த இபிஎஸ்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது திமுக அரசின் செயல்பாடுகள் தொடர்பான புகார்மனுவையும் கொடுத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் நடைபெறுகின்ற மோசமான சம்பவங்களை ஆளுநர் கவனத்தை கொண்டு வருவதற்காக ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தி இருப்பதாக கூறினார்.  குறிப்பாக  ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்து 18 மாதங்கள் ஆகிறது.  இந்த 18 மாதம் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதாகவும் எங்கே பார்த்தாலும் கொலை,கொள்ளை, திருட்டு, வழிப்பறி பாலியல் வன்கொடுமை இதுதான் அன்றாட நிகழ்வாக உள்ளதாக தெரிவித்தாக கூறினார்.

கோவை குண்டு வெடிப்பு

மேலும் கோவையில் சிலிண்டர்  வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்துள்ளது.  தீபாவளி பண்டிகையையொட்டி தீவிரவாத செயல் நடைபெறும் என்ற செய்தியை மாநில அரசாங்கத்திற்கு கொண்டு வந்தது. ஆனால் தமிழக காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்  கோவை உக்கடம் பகுதியில் சிலிண்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  உளவுத்துறை எச்சரிக்கையாக இருந்து கவனமாக இருந்து செயல்பட்டு இருந்தால் குண்டு வெடிப்பை கண்டுபிடித்து தவிர்த்து இருக்கலாம் எனவும் கூறினார். இதன் மூலம் இந்த அரசு திறமையற்ற அரசு என்பது  நிரூபணம் ஆகி உள்ளதாக கூறினார். 

ஆபாசமாக பேசுபவனை விட்டு விட்டு..! பெண்களைத் தண்டிப்பதா.? இது மானம்கெட்ட பிழைப்பு- கஸ்தூரி ஆவேசம்


அனைத்து துறைகளிலும் லஞ்சம்

தமிழகத்தில் மாணவர்களிடையே  போதை பொருள் கட்டுப்படுத்துவதை  நிர்வாக திறமையின் காரணமாக தமிழக அரசால் தடுக்க முடியவில்லையென தெரிவித்தவர், அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வந்து  எல்லா பகுதிகளிலும் தாராளமாக போதைப்பொருள் கிடைப்பதாகவும் குற்றம்சாட்டினார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.  இந்த ஆட்சியில் கொடிய கமிஷன், கலெக்‌ஷன், என்பதுதான் தாரக மந்திரமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். எந்தத் துறை எடுத்தாலும் அதில் லஞ்சம் தான் உள்ளது என்றும்  லஞ்சம் இல்லாத துறையே தமிழகத்தில் இல்லை என்பதையும்  சுட்டிக்காட்டி ஆளுநரிடம் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாக தெரிவித்தார்.

மதுபானங்களில் கொள்ளை

மதுபானங்களில்  மிகப்பெரிய கொள்ளை நடைபெறுவதாக தெரிவித்தவர், 24 மணி நேரமும் பார்கள் இயங்கி கொண்டிருப்பதாகவும், சட்டவிரோதமாகவும் பார்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். மதுபானங்களில் மிகப்பெரிய மெகா ஊழல் நடைபெறுவதாகவும், முறையாக கொள்முதல் செய்யப்பட்டு மதுபானங்களை விற்பனை செய்யாமல் மதுபான ஆலைகளில் இருந்து கலால் வரி செலுத்தாமல், மதுபான வகைகளை பார்களில் விற்று திமுகவினர் லாபம் சம்பாதித்து வருவதாக தெரிவித்தார்.  

தமிழக பாஜகவில் பெண்கள் என்றால் ஒரு நீதியும், ஆண்கள் என்றால் ஒரு நீதியா? அண்ணாமலையை அலறவிடும் மநீம..!

ஆளுநர் செயல்பாடு சிறப்பு

மேலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநரிடம் பேசியதாக தெரிவித்தவர், மசோதா மீது ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தெரிவித்தவர்,  திமுக, ஆளுநரை விமர்சிப்பது வாடிக்கையான ஒன்றுயென்றும்  எனவே ஆளுநர் தான் திமுகவை தட்டிக் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

ஆபாசமாக பேசுபவனை விட்டு விட்டு..! பெண்களைத் தண்டிப்பதா.? இது மானம்கெட்ட பிழைப்பு- கஸ்தூரி ஆவேசம்
 

click me!