அமைச்சர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தானை நீக்குங்கள்- திமுக அரசுக்கு எதிராக சீறும் எடப்பாடி பழனிசாமி

By Ajmal KhanFirst Published Jun 6, 2023, 10:32 AM IST
Highlights

கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
 

டாஸ்மாக் மர்ம மரணம்

கள்ளச்சாரய விற்பனை செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விடியா ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தப்படும் கடைகள் மற்றும் பார்களில் நடக்கும் அவலங்கள் குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். கடந்த மே மாதம், தஞ்சாவூரில் சட்ட விரோத பார் ஒன்றில் தனித் தனியாக வேவ்வேறு நேரங்களில் மது அருந்திய  இரு மீன் வியாபாரிகள் அரசு மருத்துவமனைகளில் மரணமடைந்துள்ளனர்.  

அவர்கள் சயனைட் அருந்தியதால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் சயனைட் உட்கொண்டவுடன் உடனடியாக மரணம் சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இருவரது உடற்கூறாய்வை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடத்த நான் வலியுறுத்தி இருந்தேன். 

மதுபானம் குடித்து இரண்டு பேர் இறந்தது எப்படி.?

இரண்டு மரணங்களும் சட்ட விரோத பார்களினால் ஏற்பட்ட நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கிடாரிப்பட்டியில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தை அருந்திய ஒருவர் இறந்துள்ளார். இவருடன் மது அருந்திய 16 வயது சிறுவன் உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் துறை, இறந்தவரின் உடலை உடற்கூறாய்வு செய்து பரிசோதிப்பதற்கு முன்னரே, அவர்கள் பெயிண்ட் வேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தண்ணீருக்கு பதில் கலந்து குடித்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரிப்பதாகக் கூறியுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. எப்போதிருந்து காவல் துறை அதிகாரிகள் மருத்துவத்தில் வல்லுனர்களாகத் திகழ்ந்து, ஆளும் அரசுக்கு சாதகமான பதிலை பத்திரிக்கை செய்திகளாக தருகின்றனர் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் கள்ள சாராய மரணம்

கடந்த பல நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்த சோதனை நடவடிக்கைகள் மூலம் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒரு சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சுதல்; அப்பாவி மக்களின் நிலத்தை பறிப்பது; அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி விஞ்ஞான முறையில் கோடிகளை சுருட்டுதல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கள்ளச் சாராயம் குடித்து எத்தனை பேர் இறந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணம் சில லட்சங்களை வீசி அவர்களது வாயை அடைத்துவிடலாம் என்ற மனப்பான்மையை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுடைய செயல்பாடுகள் மூலம் உணர முடிகிறது. தவறு செய்யக்கூடிய கட்சிக்காரர்களையோ, அமைச்சர்களையோ தட்டிக் கேட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற பொம்மை முதலமைச்சராக திரு. ஸ்டாலின் இருப்பது வெட்கக்கேடானது. 

செஞ்சி மஸ்தானுக்கு தொடர்பு

கடந்த 'மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச் சாராயத்தை அருந்தி சுமார் 22 பேருக்குமேல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய திமுக நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழகக் காவல் துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது. அதைத் தொடர்ந்து, மது விற்பனை மற்றும் சட்டவிரோதமாக பார்களை நடத்துதல் சம்பந்தமாக காவல் துறை கைது செய்தவர்களில், ஒரு அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சி திமுக நிர்வாகிகளான, செஞ்சி பேரூராட்சி மன்ற 4-ஆவது வார்டு உறுப்பினர் திருமதி லட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன், 16-ஆவது வார்டு உறுப்பினர் திருமதி புவனேஸ்வரியின் கணவர் அண்ணாதுரை, நரசிங்கராயன்பேட்டை கிளையின் திமுக செயலாளர் சிவக்குமார், சக்கராபுரம் பகுதி திமுக நிர்வாகி தண்டபாணி ஆகிய 4 திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்

இவர்கள் அனைவருமே அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தானுக்கு ஆதரவாளர்களாக இருப்பதால், கடந்த இரண்டு வருடங்களாக விடியா அரசின் காவல் துறை இவர்களது நடவடிக்கைகளை முழுமையாக அறிந்திருந்தும் கைது செய்யாமல் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டி வந்துள்ளது, மாவட்ட மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது.  கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். தவறு இழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சப்பைக் கட்டு கட்டும் வகையில் வசனம் பேசிக்கொண்டிருந்தால், 

அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

அல்லலுறும் தமிழக மக்கள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள். சட்ட விரோத மது பார்கள் மட்டுமல்லாமல், டாஸ்மாக் கடைகளிலும், சட்ட விரோத மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்பதை காவல் துறை ஆய்வு செய்து உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளிலும் கலால் முத்திரை உள்ள மதுபானங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை, கலால் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

 

 

click me!