
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. இதில், உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், குண்டு மழை நடுவே உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலில் இருந்து தமது உயிரை காத்துக் கொள்ள பதுங்கு குழி மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தமது தறபோதைய நிலைமை குறித்து வீடியோவும் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே, உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதின் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள தமிழகம் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் பல இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
ரஷ்ய விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பெய்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பே அங்குள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்துவந்திருக்க வேண்டும். ஆனால், மீட்பு நடவடிக்கை ஒரு சில நாட்களுக்கு முன் தான் தொடங்கியதால் சில நூறு இந்தியர்களை மட்டுமே மீட்க முடிந்தது. உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகள் தூதரகம் மூலமாக வழங்கப்பட வேண்டும். மாற்று வழிகளை ஆராய்ந்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.