இன்று முதல் சென்னையை கலக்க வருகிறது எலக்ட்ரிக் பஸ் ! தொடங்கி வைக்கிறார் எடப்பாடி !!

By Selvanayagam PFirst Published Aug 26, 2019, 7:16 AM IST
Highlights

சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் இன்றுமுதல் சோதனை ஓட்ட முறையில் இயக்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
 

சென்னையில் பெருநகர மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலமும், சென்னை தவிர மற்ற பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக போக்குவரத்துக்கழகம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. போக்குவரத்து கழகங்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொண்டு மின்சார பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.

மின்சார பஸ்களின் விலை சற்று அதிகம் என்ற போதிலும், இதுபோன்ற பஸ்களை இயக்க ஆகும் செலவு மிகவும் குறைவு என்பதாலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதை கருத்தில் கொண்டும் மின்சார பஸ்களை இயக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது.

அதன்படி, போக்குவரத்து கழகங்களை மறு கட்டமைப்பின் மூலம் நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மின்சார பஸ்களையும், 12 ஆயிரம் பி.எஸ்.-4 வகை பஸ்களையும் வாங்குவதற்கு தமிழக அரசு முடிவெடுத்தது.

முதற்கட்டமாக 100 மின்சார பஸ்கள் ஜெர்மனி நாட்டின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் வாங்கப்பட உள்ளது. இதில் 80 பஸ்கள் சென்னையிலும், 10 பஸ்கள் மதுரையிலும், 10 பஸ்கள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன.

சோதனை ஓட்ட முறையில் 2 பஸ்களை சென்னையில் இயக்க தமிழக அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, இந்த 2 பஸ்களை உடனடியாக வாங்கி அவற்றை இயக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி, 2 புதிய மின்சார பஸ்களில் ஒரு பஸ் ரெடியாக உள்ளது.

இந்த பஸ்சை அசோக் லேலண்ட் நிறுவனம் வடிவமைத்து தயாரித்து உள்ளது. இந்த பஸ், சென்னையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடக்கும் விழாவில் இந்த புதிய பஸ்சை தொடங்கி வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


இந்த மின்சார பஸ்களை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம் என்றும், 54 பயணிகள் பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குளிர்சாதன வசதியுடன் கண்காணிப்பு கேமராவும் பஸ்சில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!