
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு முடிந்தது. தேர்தலில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2-இல் நடைபெற உள்ளதால், அதுவரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த மையங்களை இரவு பகலாகக் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அதிமுக - பாஜக கூட்டணியின் பண பலம், அதிகார பலம், ஆங்காங்கே காவல் துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்து கழகத்தினரும், கூட்டணிக் கட்சித் தோழர்களும் தேர்தல் பணியாற்றியிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு அவற்றை காவல் துறையும் தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக்கொள்ளட்டும் என்று நாம் இருந்திடலாகாது.
நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை மறந்துவிடக் கூடாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மையங்களைப் பாதுகாப்பது நம் கடமை. வேட்பாளர்களும், நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பாதுகாக்கப்பட்ட மையங்களை 24 மணி நேரமும் இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும். வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் ‘டர்ன் டியூட்டி’ அடிப்படையில் அமர்ந்து கண்காணித்திட வேண்டும். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது!” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.