உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடும் பதவிகள் என்னென்ன? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

By sathish kFirst Published Oct 13, 2019, 1:45 PM IST
Highlights

தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடும் பதவிகள் எவை என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடும் பதவிகள் எவை என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 வருஷமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் கடந்த மாதம் ஆரம்பித்தது. வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலமாகவும், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு வாக்குச் சீட்டு முறையிலும் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தேர்தலில் கட்சி அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படாது என்று தேர்தல் ஆணையம்  அதிரடியாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பாணையில், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம். ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் பதவிகளுக்கு சுயேச்சை சின்னங்களில் போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் சில வாரங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!