தபால் வாக்காளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு வழங்கவில்லை.. திமுக நீதிமன்றத்தில் முறையீடு..

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2021, 2:09 PM IST
Highlights

நீதிமன்ற உத்தரவின் படி தபால் வாக்களிக்கும் வாக்காளரின் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்ற திமுகவின் முறையீட்டை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி தபால் வாக்களிக்கும் வாக்காளரின் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்ற திமுகவின் முறையீட்டை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத் திறனாளிகளும், கொரோனா பாதித்தவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக எம் எல் ஏ-வும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு தொகுதி வாரியாக தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை, மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்றிலிருந்து 31 ம் தேதி வரை மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று தபால் வாக்கு சீட்டு வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி தபால் வாக்கு பதிவு செய்பவர்களின் பட்டியல் இதுவரை அரசியல் கட்சிகலுக்கு வழங்கப்படவில்லை என திமுக முதன்மை செயலாளர் நேரு தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இதை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
 

click me!