
சசிகலாவும் தினகரனும் இருந்தால் கட்சிக்கு யாரும் ஒட்டு போட மாட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி, அதிமுக தற்போது ஒரு இக்கட்டான சூழ் நிலையில் இருக்கிறது என்றார்.
மேலும், இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இரு அணிகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினகரனையும், அவர்களது குடும்பத்தையும் ஒதுக்கவில்லை என்றால், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்காகவே, இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதலில் தினகரனை மட்டும் ஒதுக்கி வைத்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால் பன்னீர் அணி தீவிரமாக வலியுறுத்தி வருவதால், சசிகலாவையும் ஒதுக்க வேண்டிய சூழல் வந்து விட்டது.
தற்போதய சூழலில், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டுமெனில், சசிகலாவையும் கட்சியை விட்டு ஒதுக்குவதை தவிர வேறு வழியில்லை.
பொது செயலாளர் யார்? என்பதை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறகு முடிவு செய்து கொள்ளலாம். இன்னும் சில நாட்களில், உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால், அதற்குள் இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டியது அவசியம்.
சின்னத்தை மீட்பது ஒரு பக்கம் இருந்தாலும், சசிகலாவும், தினகரனும் இருந்தால், நமக்கு யாரும் ஒட்டு போடா மாட்டார்கள். இதில் யாருக்காவது மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் தாராளமாக சொல்லலாம் என்று கூறி எடப்பாடி அமர்ந்து விட்டார்.
ஆனால், சிறு சலசலப்பு எழுந்ததே தவிர, யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லை.