
சோம்பலை நீக்கி, கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம் என்ற ஜெயலலிதாவின் வாக்கை மனதில் நிறுத்தி அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் நாடும் வீடும் வளம் பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உழைக்கும் வர்க்கத்தினருக்கு விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், தேசிய வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் வாழ்வில் வளம்பெருகட்டும் என்றும் அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் நாடும், வீடும் வளம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களின் உன்னத திருநாளாம் மே தின நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “மே தின” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர்களால் இந்த உலகம்.. உழைப்பாளர்களுக்கே இந்த உலகம்... என்பதை வலியுறுத்தும் வகையில், முதன்முதலில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடத் தொடங்கிய மே 1-ம் நாளை உலகமே நினைவு கூறும் வகையில் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்..
உழைக்கும் மக்களின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றுகின்ற இந்த மே தினத் திருநாளில், ‘உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை என்பதை உணர்ந்து, சோம்பலை நீக்கி, கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.