ஈரோட்டில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
58 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம், 484 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், 36 கோடி ரூபாய் செலவில் காலிங்கராயன் புனரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எடப்பாடி அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து மைக் பிடித்த எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலத்தை தவிர்த்து ஏனைய அனைத்து அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.
ஜெயலலிதா நிறுத்திய அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்ற ஒரே மாவட்டம் ஈரோடு தான் .ஈரோடு அதிமுகவின் எஃகு கோட்டை. ஈரோடு மாவட்டத்திற்காக ஜெயலலிதா நினைத்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
விவசாயிகளின் உற்ற தோழனாக அதிமுக இருக்கும்.விவசாயிகளின் தேவையை உணர்ந்து செய்வதே அரசின் கடமை.நெருக்கடி காலத்தில் உதவிக் கரம் நீட்டுபவர்களே நண்பர்கள்.போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுபவர்கள் நண்பர்கள் அல்ல" இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதற்கிடையே நிகழ்ச்சியில் முன்னதாகப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார். தற்போதைய தமிழக அரசு வேகமாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பல்வேறு திட்டங்களை 115 நாட்களில் முதல் அமைச்சர் எடப்பாடி சிறப்பாக செய்து வருவதாக பாராட்டு தெரிவித்தார்.