எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்... பாஜக பற்றியெல்லாம் கவலையில்லை... கடம்பூர் ராஜூ பொளேர்..!

By Asianet TamilFirst Published Dec 20, 2020, 9:07 PM IST
Highlights

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அதிமுகதான் முடிவு செய்ய முடியும். அதை ஏற்கெனவே முடிவெடுத்து அறிவித்து விட்டோம். எனவே அந்த நிலைப்பாட்டோடுதான் நாங்கள் தேர்தலை சந்திப்போம். மற்றவர்கள் (பாஜக) சொல்வதை பற்றியெல்லாம் கவலையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
 

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அதிமுகதான் முடிவு செய்ய முடியும். அதை ஏற்கெனவே முடிவெடுத்து அறிவித்து விட்டோம். எனவே அந்த நிலைப்பாட்டோடுதான் நாங்கள் தேர்தலை சந்திப்போம். மற்றவர்கள் (பாஜக) சொல்வதை பற்றியெல்லாம் கவலையில்லை. அரசின் கடமையே மக்களுக்கு உதவி செய்வதுதான். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவேதான் மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசாக ரூ. 2500-ஐ முதல்வர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதில் அரசியல் சாயம் பூசினால் அது எதிர்க்கட்சிகளின் விருப்பம்.


நடிகர் கமல்ஹாசன் அதிமுகவுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவரால் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நடிகர் கமல் அரசியலில் தடம் பதித்ததும் இல்லை; இனியும் பதிக்கப்போவதில்லை. அவர் உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறார். கமல்ஹாசன் மட்டுமல்ல யாராக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தவறான கருத்துகளைச் சொன்னால், அமைச்சர்கள் முதல் அதிமுகவின் சாதாரண தொண்டர்களும் பதிலடி கொடுப்பார்கள்.” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
 

click me!