இது சாதாரண வெற்றியில்ல... பீதியிலிருந்து அகலாத துரைமுருகன் அதிரடி பேட்டி..!

By Thiraviaraj RMFirst Published Aug 10, 2019, 12:10 PM IST
Highlights

சிறுபான்மையினரின் வாக்குகள் எப்போதும் திமுகவுக்கு அதிகமாக கிடைக்கும் என்பதை வேலூர் தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது என திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட சுமார் 8,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திமுகவுக்கு ஆதரவான சூழல் இருந்தபோதும், நூலிழையிலேயே வெற்றி கிடைத்துள்ளதும், அதிமுக-வின் வாக்கு வங்கியில் பெரிய சேதாரம் இல்லை என்பதும் இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

திமுக வெற்றி குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொருளாளாரும் கதிர் ஆனந்தின் தந்தையுமான துரை முருகன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “தேர்தலைப் பொறுத்தவரை எந்தவொரு வெற்றியையும் சாதரணமாக பார்க்க முடியாது. அதைப் போலத்தான் இந்த வெற்றியும் சாதரணமானது கிடையாது. இந்த வெற்றி ஒரு விஷயத்தைத்தான் உணர்த்துகிறது. தளபதி ஸ்டாலின் மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இதன் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது” என்று கூறினார். 

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் பல வட்டங்களில் அதிமுக-வின் ஏ.சி.சண்முகத்துக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால் சிறுபான்மையினர்கள் அதிகம் இருக்கும் வாணியம்பாடி வட்டத்தில், திமுக-வுக்கு சுமார் 22,000 வாக்குகள் அதிகம் கிடைத்தது. இந்த வாக்குகள்தான் திமுக, வெற்றி பெறக் காரணம். இது குறித்து பேசிய துரை முருகன், “சிறுபான்மையினர்களான கிறித்துவர்கள், முஸ்லிம்களின் வாக்குகள் எப்போதும் திமுக-வுக்கு அதிகமாகவே கிடைக்கும். இந்த முறையும் அது நிரூபணமாகியுள்ளது” என்று தெரிவித்தார். 

click me!