சென்னைக்கு தண்ணீர் தர மாட்டேன்னு நான் எப்போ சொன்னேன் ? தயவு செய்து தவறான பிரச்சாரம் செய்யாதீங்க !! துரை முருகன் வேதனை !!

By Selvanayagam PFirst Published Jun 22, 2019, 10:24 PM IST
Highlights

பற்றாக்குறையுடன் வேலூருக்கு  விநியோகிக்கும் காவிரி நீரை மறித்து  சென்னைக்கு கொண்டு போனால்தான்  வேலுர் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்ற பேசினேனே தவிர, சென்னைக்கு  தண்ணீர் கொண்டு போகக் கூடாது என நான் சொல்லவில்லை என திமுக பொருளாளார் துரை முருகன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியும்,  மு.க.ஸ்டாலினும், வேலூர் மாவட்டத்திற்கென்று காவேரி தண்ணீரை ஒரு கூட்டுக் குடிநீர் திட்டமாக அறிவித்தார்கள். 

திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம் வரையில் இருக்கின்ற பல நகரங்களுக்கும் - பல கிராமங்களுக்கும் காவேரி நீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைத்துக் கொண்டிருந்த, அத்தண்ணீரும்  தற்பொழுது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.  

இந்த நிலையில், அந்த காவேரி தண்ணீரை மறித்து, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டு போவதாக இங்கே பேசிய பலர் தெரிவித்தனர். அப்படி கொண்டு போவது நியாயமும் அல்ல - விவேகமும் அல்ல.  

ஜோலார்பேட்டையைத் தவிர, வேறு எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனை சென்னைக்கு கொண்டு போவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. 

அதைவிடுத்து, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகிற, பற்றாக்குறையுடன் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவேரி நீரை மறித்து, சென்னைக்கு கொண்டு போனால், எங்கள் வேலூர் மாவட்ட மக்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றுதான் நான், காலை,  வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

ஆனால், இப்பேச்சினை சில பத்திரிகைகளும் - ஊடகங்களும், திரித்து  ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போவதற்கு துரைமுருகன் எதிர்ப்பு’ என்று தவறாக தலைப்பிட்டு மக்களிடத்தில்  தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

சென்னையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறவன் நான், சென்னையில்  என்ன நடக்கிறது என்று நன்றாகவே தெரியும். எனவே, ஒரு தவறான பிரச்சாரத்தை துவக்கி, அதன் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என துரை முருகன் தெரிவித்துள்ளார்.

click me!