காங்கிரசே வேண்டாம்… கூட்டணிக்குள் கும்மியடித்த கே.என்.நேரு !

By Selvanayagam PFirst Published Jun 22, 2019, 7:47 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் திமக தனித்த போட்டியி வேண்டும் என்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசினார். இந்த கருத்து திமுகவின் கருத்து அல்ல என்றும், ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனது தனிப்பட்ட கருத்துதான் என்றும் கூறி  கூட்டணிக்குள் பூகம்பத்தை உருவாக்கி விட்டார்.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நேரு, உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். இது கட்சியின் கருத்தல்ல. என்னுடைய தனிப்பட்ட கருத்து. தற்போது கூட்டணி இணைந்து அனைவரும் வெற்றிபெற்றுவிட்டனர்.

ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸைச் சேர்ந்த யுவராஜ், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் திமுக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார்கள். 

காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இருந்த உறவைக் கெடுத்ததே அவர்கள் இருவர்தான். சட்டமன்றத்தில் செல்லகுமார் தலைவர் கருணாநிதி எதிரிலேயே பேசினார். ஆனால் கூட்டணி தர்மத்திற்காக அதே செல்லகுமாருக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் வேலைசெய்து வெற்றிபெற வைத்தோம்” என்றார்.

தொடர்ந்து நேற்று தென்சென்னையில் உள்ள 200 வட்டத்தில் காங்கிரஸுக்கு 35 வட்டங்களை பெற்றே தீருவோம் என்று ஒருவர் கூறியுள்ளார். நான் தலைவரிடம் வலியுறுத்துவது, மக்களுக்கு நாம் பயன்பட வேண்டுமென்றால், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் நன்றாக இருக்கும். 

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? ஆனால் இது என்னுடைய கருத்து. தலைவர் எடுக்கும் முடிவினை நான் ஏற்றுக்கொள்வேன். திருச்சியைப் பொருத்தவரை தனித்துப் போட்டியிட வேண்டுமென்றுதான் தலைவரிடம் வலியுறுத்துவேன்” என்று பேசினார். கே.என்.நேருவின் இந்தப் பேச்சு திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!