
மூன்று மாதத்தில் எடப்பாடி ஆட்சியே கவிழும் எனவும் சின்னமோ கட்சியோ யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமல்ல எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றது.
சசிகலாவே அடுத்த சி.எம் என கூறி வந்த அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி அவரை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவியை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் ஆளுங்கட்சியினர்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலையையும் கட்சியையும் எடப்பாடி பன்னீர் செல்வம் மீட்டனர்.
இதைதொடர்ந்து சின்னமோ கட்சியோ முக்கியமல்ல எனவும் தேர்தல் யார் நிற்கிறார்கள், மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பதே முக்கியம் எனவும் டிடிவி தினகரன் சூளுரைத்தார்.
இதையடுத்து நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இதைதொடர்ந்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் இரண்டு சுற்றின் முடிவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், மதுசூதனன் ரவுடிசம் செய்து வருவதாகவும் தமிழ்நாடு மக்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆர்.கே.நகர் மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் தமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
தனக்கு வெற்றியை அளித்த ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றி எனவும் வெற்றி பெற சின்னமோ கட்சியோ யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமல்ல எனவும் யார் தேர்தலில் நிற்கிறார்கள் என்பதே முக்கியம் எனவும் தெரிவித்தார்.