கிடைக்காத ஊசி மருந்துகளை, மருத்துவர்கள் ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்று பிரபல நடிகர் சோனு சூட் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிடைக்காத ஊசி மருந்துகளை, மருத்துவர்கள் ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்று பிரபல நடிகர் சோனு சூட் கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இவர், கடந்த ஆண்டு ஊரடங்கு விதிக்கப்பட்ட போது, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக உதவியவர்.
சொந்த பணத்தில் வெளிநாட்டில் சிக்கிக்கொண்டவர்களையும் இந்தியா வர உதவினார். இதனால், அவர் வில்லன் அல்ல, ஹீரோ என்று சமூக வலைதளத்தில் புகழப்பட்டார். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்காக ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இப்போதும் உதவி வருகிறார். தொடர்ந்து தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் களுக்காகவும் அவர் உதவி வருகிறார்.
இந்நிலையில் எங்கும் கிடைக்காத ஊசி மருந்துகளை, மருத்துவர்கள் ஏன் பரிந்துரை செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், ஒரு எளிய கேள்வி: குறிப்பிட்ட ஊசி எங்கும் கிடைக்கவில்லை என்பது தெரிந்தும், ஏன் ஒவ்வொரு மருத்துவரும் அதை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள்? மருத்துவமனைகளே அந்த மருந்தைப் பெற முடியாதபோது, சாதாரண மனிதனுக்கு அது எப்படி கிடைக்கும்? அதற்கு மாற்று மருந்தைப் பயன்படுத்தி ஏன் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.