
பீலா விடுகிறார் பீலே… ஜெயலலிதாவின் மரணம் குறித்து கொந்தளிக்கும் மருத்துவர் ராமதாஸ்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் இருந்து வரும் நிலையில் அது குறித்து ,சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இந்த பிரஸ் மீட் குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே , அப்பல்லோ டாக்டர் பாபு ஆப்ரஹாம் மற்றும் தமிழக அரசு மருத்துவர்கள் அளித்த விளக்கம் சிகிச்சை குறித்த சந்தேகங்களை போக்குவதற்கு பதிலாக மேலும் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போதே அவருக்கு செப்டிசீமியா எனப்படும் கிருமித் தொற்று தாக்கியிருந்ததாகவும், அவர் இன்னும் சில நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரிச்சர்ட் பீலே கூறியிருக்கிறார்.
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பே ஜெயலலிதாவுக்கு வீட்டில் வைத்து சசிகலாவின் உறவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக அவரது இல்லத்தில் வைத்து எந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது?
ஜெயலலிதாவுக்கு செப்டிசீமியா தாக்குதல் இருந்தது அப்போதே தெரியுமா? தமிழகத்தின் முதலமைச்சரான ஜெயலலிதாவுக்கு வீட்டில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படாதது ஏன்?எனவும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதே அவருக்கு செப்சிஸ் தொற்று இருந்திருந்தால் அது குறித்து உடனடியாக தெரிவிக்கப்படாதது ஏன்?
ஜெயலலிதாவுக்கு காய்ச்சலும், நீர்ச்சத்துக் குறைவும் மட்டுமே இருந்ததாகவும், அதுவும் உடனடியாக குணப்படுத்தப்பட்டதால் அவர் வழக்கமான உணவுகளை உட்கொள்ளத் தொடங்கி விட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது ஏன்?
ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தான் அக்டோபர் முதல் வாரத்தில் ரிச்சர்ட் பீலே சென்னை வந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்த போதும் கூட, அடுத்தடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் செப்சிஸ் கிருமித் தாக்குதல் குறித்து குறிப்பிடப்படாதது ஏன்? என்ற வினாக்களுக்கு பீலே விடையளிக்கப்படவில்லை என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் உள்ளிட்ட அனைத்து நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும், மாரடைப்பு மட்டும் ஏற்படாவிட்டால் வீடு திரும்பியிருப்பார் என்றும் ஓரிடத்தில் ரிச்சர்ட் பீலே கூறினார்.
மற்றொரு இடத்தில் செப்சிஸ் கிருமித் தொற்று இதயத்தைத் தாக்கியதால் தான் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறுகிறார். ரிச்சர்ட் பீலே கூறும் இந்த இரு விஷயங்களும் முன்னுக்குப் பின் முரணாக இல்லையா? எனவும் ராமதாஸ் வினா எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் காமிரா பொருத்தப்படவில்லை என்று பீலே கூறவில்லை. அத்தகைய சூழலில், ஜெயலலிதா அறையில் காமிரா இல்லை என ரிச்சர்ட் பேல் இப்போது கூறுவது நம்பும்படியாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் எந்த சர்ச்சையும் இல்லை என்றால் இந்த பதிவுகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? அத்தகைய பதிவுகளைக் கூட செய்யாத அளவுக்கு அப்பல்லோ நிர்வாகத்தை தடுத்தது யார்? என அடுக்கடுக்காக ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி மத்திய புலனாய்வுப் பிரிவு, மருத்துவ வல்லுனர்கள், நீதிபதிகள் அடங்கிய பல்துறை விசாரணைக்குழுவை விசாரணைக்கு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.