அதிரடியாக மூடப்படும் குடிதண்ணீர் ஆலைகள்... கேன் ரூ 70 -க்கும் மேல் விற்பனை... பற்றாக்குறையால் பரிதவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Feb 29, 2020, 5:14 PM IST
Highlights

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியார் கேன் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து உரிமம் இல்லாத தனியார் குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்து வருகின்றனர். 

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியார் கேன் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து உரிமம் இல்லாத தனியார் குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்து வருகின்றனர். 

குடிநீருக்காக தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் அபாயகரமான அளவுக்கு குறைந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக சில அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதற்கு தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடிநீர் உற்பத்தியை நிறுத்தி விட்டு அவர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று  3-வது நாளாக நீடித்தது. கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருப்பதால் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. பல இடங்களில் கேன் தண்ணீர் இல்லை என்ற நிலை தோன்றி உள்ளது.

இதை பயன்படுத்தி சிலர் கூடுதல் விலைக்கு கேன் தண்ணீரை வழங்குகிறார்கள். ஆனால் இந்த கேன் தண்ணீர் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டது தானா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீரை குடிக்கலாமா? வேண்டாமா? என்று மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிமம் பெறாத தனியார் குடிநீர் ஆலைகளை இன்று அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் 1,689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 470 குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 215 குடிநீர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் இருந்து தினமும் 5 லட்சம் குடிநீர் கேன் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
4 மாவட்டங்களில் உள்ள தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதால் கேன் தண்ணீர் சப்ளை இன்று கணிசமாக குறைந்தது.

சென்னையில் இன்று காலை 5 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 23 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 8 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூரில் 33 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் முடக்கப்பட்டுள்ளன.

குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருவதால் வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தொடங்கி உள்ளது. சென்னையில் 90 சதவீதம் பேர் கேன் தண்ணீரைதான் நம்பி உள்ளனர். அவர்களுக்கு கேன் தண்ணீர் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலர் கூடுதலாக கேன் தண்ணீரை வாங்கி இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிலர் தண்ணீரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். பொதுவாக கேன் தண்ணீர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுகிறது. திருவள்ளூரில் குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. ரூ.25 முதல் ரூ.40 வரை கேன் தண்ணீர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீர் ரூ.50 முதல் ரூ.60 வரை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
 

click me!