தேர்தலுக்காக நாடகம்... திமுக இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது... சினம் கொள்ளும் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Dec 13, 2021, 2:54 PM IST
Highlights

இசுலாமிய மக்களின் ஓட்டு வேண்டும். அவர்களின் உரிமை வேண்டாம் என்று திமுக செயல்படுவது மிகப்பெரிய கொடுமை 

இசுலாமிய மக்களின் வாக்கு வேண்டும், அவர்களின் வாழ்க்கை வேண்டாம். இசுலாமிய மக்களின் ஓட்டு வேண்டும். அவர்களின் உரிமை வேண்டாம் என்று திமுக செயல்படுவது மிகப்பெரிய கொடுமை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’இசுலாமியர் விடுதலை குறித்து அம்மையார் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தபோது அது எங்கள் கொள்கை முடிவே இல்லை என்றார். திமுகவுக்கோ அது கொள்கையே இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பியவர் ஐயா ஸ்டாலின்தான். ஆனால் நாங்கள் நேரில் சென்று வலியுறுத்தியபோது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்று தட்டிக் கழித்துவிட்டார். அதேபோல் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்காவது திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் பரப்புரையின்போது பேசிவிட்டு, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.

ஐயா எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் 100 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். ஒருவர் கூட இசுலாமியர் இல்லை. இப்போது திமுக ஆட்சிக்காலத்தில் 700 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். ஒருவர் கூட இசுலாமியர் இல்லை. கேட்டால் சட்டம் அப்படி இருக்கிறது என்கிறார்கள். அந்தச் சட்டத்தை இயற்றியவர்களே இந்தத் திராவிட ஆட்சியாளர்கள்தானே. திரும்பப் பெறமுடியாது என்று சொன்ன வேளாண் சட்டங்களைத் தொடர்ச்சியாகப் போராடித் திரும்பப்பெறச் செய்ததுபோல், இசுலாமியர் விடுதலையை வலியுறுத்தியும் மாவட்டங்கள் தோறும் தொடர்ச்சியாகப் போராட நாங்கள் தயாராக உள்ளோம். மதவாதத்திற்கு எதிரானவர்கள் தாங்கள் என்று திமுக சொல்வது உண்மையானால் மதவாதத்திற்கு எதிராக வாழ்நாளின் இறுதி நொடிவரை போராடி அதற்காக உயிர்ப்பலியான பழனிபாபா அவர்களின் நினைவுநாளை அரசு நிகழ்வாக முன்னெடுக்க வேண்டும்.

இசுலாமிய மக்களின் வாக்கு வேண்டும், அவர்களின் வாழ்க்கை வேண்டாம். இசுலாமிய மக்களின் ஓட்டு வேண்டும். அவர்களின் உரிமை வேண்டாம் என்று திமுக செயல்படுவது மிகப்பெரிய கொடுமை. இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் என்ன சிக்கல் உள்ளது என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும். கொளத்தூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுக் கலைக்கல்லூரியில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று திமுக அரசு அறிவித்ததுதான் இந்துத்துவம். அதை எதிர்த்து குரல் கொடுத்தது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். பிரச்சினைகளின் அடிப்படையில் பாஜகவிற்கு ஆதரவளிப்போம் என்கிறது திமுக. இங்குப் பிரச்சினையே பாஜகதான். காஷ்மீரை ஒன்றிய பாஜக அரசு மூன்றாகப் பிரித்தபோது பிரித்ததில் தவறில்லை, பிரித்த விதத்தில்தான் தவறு என்று கூறியவர் ஐயா ஸ்டாலின் அவர்கள். இசுலாமிய, கிறித்துவ மக்களுக்கு திமுக செய்த ஒரு நன்மை ஏதாவது உண்டா? 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்கின்ற இந்த ஒரு நன்மையையாவது திமுக செய்ய வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரத்தைக் கையளித்தால் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்போம். இல்லையென்றால் மக்களின் பிரச்சினைக்காக வீதியில் நின்று போராடுவோம். இது எங்கள் பிறவிக் கடமை என்ற நிறைவோடு செய்கின்றோம். இசுலாமியர்கள் என்றாலே பயங்கரவாதி, தமிழர்கள் என்றாலே பயங்கரவாதி என்ற சமூக உளவியலை முதலில் மாற்ற வேண்டும். வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய இசுலாமிய மக்களுக்குச் செலுத்த வேண்டிய நன்றி கடனுக்காவது திமுக அரசு இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்யாவிட்டால் வரலாறு திமுகவை விடுதலை செய்யாது. ஒரு நாள் மக்கள் மன்றத்தில் இதற்கு திமுக பதில் சொல்லியாக வேண்டிய நிலையை உருவாக்குவோம்.

எனவே திமுக அரசு, இசுலாமியச் சிறைவாசிகளது குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகள் நாள் தோறும் சிந்தும் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கவாவது அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் போராட்டத்தைச் செய்யவில்லை. சிறைவாசிகளின் விடுதலையை வேண்டியே போராட்டத்தை முன்னெடுக்கிறோம். முன்னாள் சிறைவாசியான தம்பி கோவை நாசர் பேசும்போது, இரு கைகளைத் துணையாகக் கேட்டார். நாங்கள் எங்கள் உயிரையே கொடுக்க ஆயத்தமாக இருக்கிறோம். ஏனென்றால் உயிர் உன்னதமானதுதான், ஆனால் அதைவிட உன்னதமானது இனத்தின் உரிமை, விடுதலை, அதன் பெருமை என்று கற்பித்த தலைவனின் பிள்ளைகள் நாங்கள். 


உயிரை இழப்பது ஒருவரின் தனிப்பட்ட இழப்பு. ஆனால் உரிமையை இழப்பது ஒட்டுமொத்த இனத்திற்கான இழப்பு. அதனால் உயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு தொடக்கம்தான். அடுத்தகட்ட போராட்டங்களுக்கான முன்னறிவிப்புதான். நம்முடைய தாய், தந்தையரும் உடன் பிறந்தார்களும் சிந்துகின்ற கண்ணீரைத் துடைப்பதற்குப் போராட்டங்களைத் தவிர, வேறு வழிகிடையாது. எனவே கோரிக்கைகள் வெல்லும்வரை தொடர்ச்சியாகப் போராடுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார். 

click me!