இந்த 3 மாவட்டங்களின் எல்லைகளை இழுத்து மூடுங்கள்... முதல்வர் எடப்பாடிக்கு காங்கிரஸ் எம்.பி. அதிரடி கோரிக்கை..!

By vinoth kumarFirst Published Jul 30, 2020, 6:08 PM IST
Highlights

கொரோனா தடுப்பு அதிகாரிகள், காவல்துறை, மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் அத்தியாவசிய சேவை புரிபவர்கள் தவிர வீட்டை விட்டு யார் வெளியில் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவும்.

இந்த 3 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவை புரிபவர்கள் தவிர வீட்டை விட்டு யார் வெளியில் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவும் எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கே.ஜெயக்குமார் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், திருவள்ளூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான கே.ஜெயக்குமார் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "தாங்கள், இன்று கொரோனா குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதால், அது தொடர்பாக ஒருசில கருத்துகளை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருவதே என் கடிதத்தின் நோக்கம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற சென்னை அடுத்த மாவட்டங்களில் தீவிரமாக பரவுவதை புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியாகவும், மிக நெருக்கமான மக்கள்தொகையுள்ள மும்பை - தாராவி பகுதியில் கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை உலக சுகாதார நிறுவனம் முதல் மகாராஷ்டிர முதல்வர் வரை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். நமது அண்டை மாநிலம் கேரளாவும் இதில் மெச்சத்தக்க வெற்றி பெற்றுள்ளது. வேறு எதையும் நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

அதிக தாக்கத்திற்கு உள்ளான நம் 3 மாவட்டங்களில் ஏதோ மேல்வாரியாக சில கூடுதல் நடவடிக்கை எடுத்திருப்பது கொரோனாவைக் கட்டுப்படுத்த போதுமானது அல்ல. கொரோனா பெரும்பாலும் மனிதர்களாலேயே பரப்பப்படுகிறது. மனித நடமாட்டத்தைத் தீவிரமாக ரத்து செய்தால் இதனை ஒடுக்குவது சாத்தியமே. இதைத்தான் தாராவியில் செய்து காட்டியுள்ளார்கள்.

நான் கீழே குறிப்பிட்டுள்ள இந்த 3 மாவட்டங்களில் ஆகஸ்ட் 1 முதல் 10 அல்லது 15 தேதி வரை தாங்கள் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்:

* இந்த 3 மாவட்டங்களின் எல்லைகளை இறுக்கமாக மூடுங்கள்.

* கொரோனா தடுப்பு அதிகாரிகள், காவல்துறை, மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் அத்தியாவசிய சேவை புரிபவர்கள் தவிர வீட்டை விட்டு யார் வெளியில் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவும்.

* வறுமை கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு இந்த ஊரடங்கு நாட்களுக்குத் தேவையான விலையற்ற உணவுப் பொருட்கள் அவர்கள் வீட்டுக்கே அனுப்ப வேண்டும். மேலும், அவர்கள் சில்லறை செலவுக்குக் குடும்பத்திற்கு ரூ.1,000 கொடுக்கவும்.

* 15 நாட்களுக்குக் கொரோனா எதிர்ப்புச் சக்திக்குத் தேவையான அனைத்து விலையற்ற மருந்துகள் அனைத்து வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

* அவசர சிகிச்சைக்கு இப்பகுதியில் நடமாடும் மருத்துவமனைகளும், சோதனைச்சாவடிகளும் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும்.

* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தினப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

* மேல்குறிப்பிட்டவைக்கு ஆகும் செலவு, இதுவரை கரோனா தடுப்பு திட்டத்திற்காக செலவு செய்யப்பட்டத்தில் மிக மிகக் குறைவானதாகவே இருக்கும்.

இவை அனைத்தையும் தீவிரமாகச் செயல்படுத்தினால் மக்கள் நடமாட்டம் இங்கு முழுவதுமாக முடக்கப்பட்டு கொரோனா தொற்றுப் பரவலை கணிசமாக கட்டுப்படுத்த முடியும். உலகிலேயே ஜனநெருக்கம் மிக அதிகமாக உள்ள தாராவியில் சாதிக்கும்போது நாமும் இதை சாதிக்கலாமே" என கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

click me!