
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எந்த அரசியல் கட்சியைச் சேர்நதவர்கள் சொன்னாலும் தயவுசெய்து அதை நம்ப வேண்டாம் என அதிமுக எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் அதிடியாக தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு இன்றுவரை மாணவ-மாணவிகள் மத்தியில் நெருப்பாக தகித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மாணவி அனிதா நினைவாக நூலக அடிக்கல்நாட்டு விழா, அவரது சொந்த ஊரான, குழுமூர் கிராமத்தில் நடந்தது. விழாவுக்கு குன்னம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம். எல்.ஏ. சிவசங்கர் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கடைசி வரை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதால்தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யப்படும் வரை தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்..
அவரை தொடர்ந்து குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசும்போது, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை மாணவர்களும், பெற்றோர்களும் தயவு செய்து நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் இருந்து கடந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு பெற அ.தி.மு.க. அரசு கடுமையாக போராடியது. ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரிலேயே நீட் தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டது என அவர் கூறினார்.
அரசியல்வாதிகளின் போராட்டத்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை. ஆகையால் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராமச்சந்திரன், அனிதா நினைவு நூலக கட்டுமானப் பணிக்காக எனது சொந்த பணத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்குகிறேன் என்றும் குறிப்பிட்டார்.