ஆளுநர்கள் வம்புகள்.. தமிழகத்தில் மூக்கை நுழைக்காதீங்க.. தமிழிசைக்கு முரசொலி விட்ட டோஸ்.. கொந்தளித்த தமிழிசை!

By Asianet TamilFirst Published Jul 17, 2022, 9:49 AM IST
Highlights

ஆளுநர்கள் வரம்பு மீறுவதால் வரும் வம்புகள் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்த திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
 

தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அரசிய்ல் புகுத்தப்படுவதாக, அந்தப் பட்டமளிப்பு விழாவையே தமிழக உயர்க் கல்வி துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார். இந்த விவகாரத்தில், ‘பல்கலைக்கழகளை மேம்படுத்தவே ஆளுநருக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகிறது’ என்று தெலங்கானா - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழிசைக்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில்  ‘ஆளுநர்கள் வரம்பு மீறுவதால் வரும் வம்புகள்’ என்ற பெயரில் சிலந்தி கட்டுரை வெளியாகியிருந்தது. 

அந்தக் கட்டுரையில் தெலங்கானா குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆளுநர்கள் வேந்தர்களாக பல்கலைக்கழகங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் கூறியது என் அனுபவத்தை வைத்துதான். ஆளுநர்கள் ஆக்கபூர்வமாகதான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். தெலங்கானா ஆளுநராக வேந்தர் பொறுப்பிலிருந்து தெலுங்கானா பல்கலைக்கழகங்களை மேம்படுத்த நான் மேற்கொண்ட பணிகள்:

1. ஆளுநராக பதவியேற்றவுடன் தெலுங்கானா மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தும் போதுதான் தெரிந்தது அங்கே 12 பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது. இருந்தாலும் பொறுப்பு IAS அதிகாரிகளை அழைத்து அவர்களுடைய பணி நிர்வாகம் குறித்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதேபோல் இரண்டு முறை பல்கலைக்கழக ஆய்வு மாநாடு நடத்தப்பட்டது. அவ்வப்போது தெலங்கானா முதல்வருக்கு பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் காலியாக உள்ள துணைவேந்தர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டும், கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டும், நேரிலும், பொது வெளியிலும் வற்புறுத்திய பின்னர் எனது தொடர் முயற்சியால் சுமார் 2 வருடங்களுக்கு பின்பு 12 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

2. புதிய கல்வி கொள்கை அறிமுகம் பற்றிய விவாதங்களையும்,விழிப்புணர்வையும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்படுத்தியது.

3. தெலங்கானாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விரிவான சுய ஆய்வறிக்கை வேண்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் மூன்று மணி நேரம் ஒதுக்கி அனைத்து பல்கலைக்கழகங்களையும் 1 மாத காலம் ஆய்வு செய்து பல்கலைக்கழகங்களின் தேவைகள், குறைகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அதன் அறிக்கைகளை உயர் கல்வி துறைக்கும், முதல்வருக்கும் அனுப்பி வைத்தது.

இதையும் படிங்க: திமுகவிற்கு எதிராக அடுத்த ஊழல் புகார்...! கவர்னரை 21 ஆம் தேதி சந்திக்க அண்ணாமலை திட்டம்

4.பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தும் பெங்களூர் NAAC சென்டருக்கு நேரடியாக சென்று தெலங்கானா பல்கலைக்கழகங்களின் தர ஆய்வறிக்கையை நேரடியாக பெற்று தெலங்கானா முதல்வருக்கு அனுப்பி வைத்து பல்கலைக்கழகங்களை மேம்படுத்த முன்னின்றது.

5. கொரோனா முதல் அலையின் போது மாணவர்களின் கற்றல் தடைபடாத வண்ணம் நாட்டிலேயே முன்னோடியாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்து வைத்தது.

6. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முன்னாள் மாணவர்களின் பட்டியலை எடுத்து பல்கலைக்கழகங்கள் முன்னாள் மாணவர்களுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்தி பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடுத்தி முன்னெடுத்துச் செல்வது.

7. பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து பணியிடங்களை நிரப்பச் செய்தேன்.

8. தெலங்கானா அரசு பல தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முனைப்பு காட்டியபோது அதன் தரங்களை ஆராய்ந்த பின்னரே சில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

9. அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆளுநரின் ஒப்புதல் எந்தவித அரசியல் தலையீடு இன்றி அரசாங்கம் அமைத்த தேர்வுக்குழு அங்கீகரித்த நபர்களையே துணை வேந்தர்களாக நியமித்தது அனைவராலும் வரவேற்கப்பட்டது.

10. பெண்களுக்கான கல்வி, முன்னேற்றம் அவர்களுடைய பொழுதுபோக்கு மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக உடல்நலம் பேணும் குறிப்பேடு பராமரிக்கபட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையும் படிங்க: கொஞ்ச கூட கூச்சமில்லாமல் திரும்ப திரும்பச் சொன்னால் என்ன செய்வது? ஆளுநரை வச்சு செய்யும் முரசொலி.!

11. பல்கலைக்கழகங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட துணை நின்றது.

12. முதன் முறையாக பல்கலைக்கழகங்களை மாணவர்களுடன் காணொளி காட்சியின் வாயிலாக குறைகளை கேட்டறிவதற்கான "Chancellor connect" என்ற இணைய வழி நிகழ்ச்சியில் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பது.

13. 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவிலும் தவறாமல் கலந்து கொண்டது போன்ற இவ்வளவு பணிகளையும் செய்தேன்” என தான் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டுள்ளார்.

மேலும், இதுவரைக்கும் கடந்த 40 ஆண்டுகளில் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற தனி நபர் தவறுகளையும் பட்டியலிட்டு எல்லா ஆளுநர்களும் தவறு செய்வதை போன்ற ஒரு தோற்றத்தை கற்பிக்க முயற்சிப்பது தவறான முன்னுதாரணம். ஆளுநர்களை பற்றி நீங்கள் கூறிய தவறுகளும் குற்றச்சாட்டுகளும் அமைச்சர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல பிரபலங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருகின்றன. அதனால் மாநிலத்தில் அரசியல் சாசனத்தை கண்காணிக்கும் ஆளுநர்களே வேண்டாம் என்பது எந்த விதத்தில் நியாயம்? ஆளுநர்கள் பல்கலைக்கழக பணிகளை வேந்தர்களாக எந்த வித விருப்பு, வெறுப்பின்றி முதல்வருக்கு தோளோடு தோள் நின்று கல்வி பணியாற்றுவதே சாலச்சிறந்தது. பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மாநில முதலமைச்சரே ஏற்றுக்கொண்டால் ஏற்கனவே இருக்கும் ஆட்சி பணியோடு வேந்தர் பணியையும் ஏற்றுக்கொண்டால் அதுவும் கட்சி பணி ஆகி விடும் என்ற வகையில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக ஆளுநர்கள் வேந்தர்களாக செயலாற்றுகிறார்கள்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையில் நீட் மசோதா..! காலம் தாழ்த்தும் கவர்னர்.. சட்டபேரவையை அவமதிக்கும் செயல் -அப்பாவு

இது அரசியலமைப்பு சட்டப்படி காலங்காலமாக ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையாகும். இது மாற்றப்பட்டால் பல்கலைக்கழக நியமனங்களும் அரசியல் சார்ந்ததாக ஆகி விடும். எனவேதான் அரசியலமைப்பு சட்டம் பல பிரிவுகளையும், கண்காணிக்கும் கடமையையும் ஆளுநர்களுக்கு வழங்கி இருக்கிறது. ஆளுநர்கள் ஆக்கப்பூர்வமான வேந்தர்களாக செயலாற்றுவதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்கி வருகிறார்கள் என்பதே எனது கருத்து. வேறு மாநிலத்தின் ஆளுநராக இருந்தாலும் தமிழகத்தை பொருத்தமட்டில் தமிழகத்தின் மகளாக சில நியாயமான கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது என்று எண்ணுகிறேன்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

click me!