மூத்த நிர்வாகிக்கு மரியாதை தரலைன்னா அம்மா தந்த தண்டனை என்ன தெரியுமா? CV.சண்முகத்தை சொல்கிறாரா ஜெ. உதவியாளர்.!

By vinoth kumarFirst Published Nov 30, 2021, 6:44 AM IST
Highlights

தலைமை செயலகத்தில் விவசாய நிகழ்ச்சி ஒன்றை எங்கு நடத்துவது என்பது குறித்து அம்மா அவர்கள் மூத்த அமைச்சர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் அந்த பகுதியை சேர்ந்தவர் என்பதால் என்னையும் அழைத்திருந்தார்கள். நான் எங்க ஊரில் நடத்த வேண்டும் என்றேன். மூத்த அமைச்சர் ஒருவர் வேறு ஒரு இடத்தைச் சொல்லி அங்கு நடந்தால்தான் நன்றாக இருக்கும் என்றார். 

எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான அன்வர் ராஜாவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்க பாய்ந்ததாக செய்திகள் வெளி வந்ததையடுத்து ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் பதிவு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பியாகவும் இருந்த அன்வர் ராஜா தற்போது அதிமுக வலுவில்லாமல் உள்ளது. அதனை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்றார். இதற்கு மற்ற நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூத்த நிர்வாகிக்கு மரியாதை தரவில்லை என்றால் அம்மா அந்த நபரை பார்க்கமாட்டார். அரசியலில் எழுந்திருக்க முடியாத அளவிற்கு அவரை ஓரம் கட்டிவிடுவார் என  சி.வி.சண்முகத்தை மறைமுகமாக தாக்கும் வகையில்  ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- 

அம்மாவை பற்றி எளிதில் புரியும்படி சொல்லுங்கள் என்றால் நான் பாடும் பாட்டு,
"ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா,
பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ"  
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதை போல் வழிபடுபவர்களுக்கு அம்மா காமாட்சி. ஆனால் எதிர்ப்பவர்களுக்கோ காளி!

ஒருமுறை மந்திரி ஒருவரை நீக்கிவிட்டார்கள். எனக்கும் அதற்கான காரணம் முழுமையாகத் தெரியவில்லை. அழகான அந்த அமைச்சர் என்னை பார்க்கும் போது விசாரித்தேன். என்ன காரணம்? என்று எனக்கும் புரியவில்லை என்று வருத்தப்பட்டார். ஆனால் அவரை எடுத்ததற்கான காரணத்தை அம்மா அவர்கள் என்னிடம் சொன்ன போது நான் அசந்து, வியந்து, பிரமித்துப் போனேன். பூங்குன்றன் அமைச்சரை எடுத்ததன் காரணம் தெரியுமா? என்றார். நான் மௌனம் காத்தேன். அம்மா சொன்னார் 'என் முன்னிலையில் மூத்த அமைச்சர்களை எதிர்த்து பேசினார். அதற்குத்தான் இந்த தண்டனை' என்றார். இந்த காரணத்தை கேட்டால் நீங்களும் மலைத்துப்போவீர்கள்.

பாசம் கொண்ட அந்த முன்னாள் அமைச்சரிடம் பேசினேன். அவர் சொன்ன விபரம் 'தலைமை செயலகத்தில் விவசாய நிகழ்ச்சி ஒன்றை எங்கு நடத்துவது என்பது குறித்து அம்மா அவர்கள் மூத்த அமைச்சர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் அந்த பகுதியை சேர்ந்தவர் என்பதால் என்னையும் அழைத்திருந்தார்கள். நான் எங்க ஊரில் நடத்த வேண்டும் என்றேன். மூத்த அமைச்சர் ஒருவர் வேறு ஒரு இடத்தைச் சொல்லி அங்கு நடந்தால்தான் நன்றாக இருக்கும் என்றார். மற்றவர்களும் அவரின் பேச்சை ஆதரிக்கவே, நானும் கடுமையாக எங்கள் இடத்தில் நடத்துவதுதான் சிறப்பு. நான் ஏற்பாடுகளை பார்த்துகொள்கிறேன். நீங்க சும்மா இருங்க, குழப்பாதீங்க' என்று மூத்த அமைச்சர்களை பார்த்து கோபத்தில் பேசிவிட்டேன் என்றார். இப்போது அவரை நீங்கியதற்கான காரணம் உங்களுக்கும் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறன்.

ஒருமுறை அம்மா அவர்களுக்கு கட்சியில் முக்கிய புள்ளி ஒருவர் கடிதம் கொடுத்தார். முக்கியமானவர் என்பதால் கடிதத்தை பிரிக்காமல் நான் அம்மா அவர்களுக்கு அனுப்பிவிட்டேன். படித்து பார்த்த அம்மா என்னை இண்டர்காமில் அழைத்து அவர் எழுதிய கடிதத்தை உனக்கு அனுப்பிருக்கிறேன் படித்து பார்த்துவிட்டு பேசு என்றார் கோபமாக... படித்து பார்த்தேன், ஒன்றும் புரியவில்லை. அம்மா அவர்களே மீண்டும் அழைத்தார். போனை எடுத்தேன். நல்ல வேலை என்ன புரிந்து கொண்டாய்? என்று கேட்காமல் அவரே வேகமாக பேச ஆரம்பித்தார். 

இவர் நல்லவர் என்று பதவி கொடுத்தால் பொதுச்செயலாளருக்கு எழுதும் கடிதத்தில் கட்சிக்காரர்களை அவன், இவன் என்று எழுதுவதற்கு இவருக்கு என்ன தைரியம் இருக்கும் என்று கடுமையாகப் பேசினார். அதன் பிறகு அந்த முக்கியமானவர் அரசியலில் சோபிக்கவில்லை. அம்மாவும் அவரைப் பார்க்க விரும்பவில்லை. பெரியவர்களுக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்று அவர் நினைத்ததோடு, தொண்டர்களை உயிருக்கு உயிராக நேசித்தார் என்பதும் உங்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்கே! ஒரு குழந்தை வணக்கம் வைத்தாலும் அம்மா அவர்கள் நின்று அந்த குழந்தைக்கு முழுமையான வணக்கம் செலுத்தும் அழகை சொல்லவும் வேண்டுமோ! இதை பார்த்தவர்களுக்கே தாயின் மகத்துவம் புரியும்! என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார்.

click me!