ஊடகங்கள் உங்களுக்கு வாய்பொத்தி சேவகம் செய்யனுமா.?? திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி.

By Ezhilarasan BabuFirst Published May 23, 2022, 8:32 PM IST
Highlights

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பத்திரிக்கை நிறுவனம் மற்றும் யூடியூப்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பத்திரிக்கை நிறுவனம் மற்றும் யூடியூப்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

ஜி ஸ்கொயர் என்கின்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஒரு தனிநபர் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது, மேலும் இந்தப் புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குனர்கள் மூவர் பெயரையும் மற்றும் சவுக்கு சங்கர், மாரி தாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரியின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர்விகடன் நிறுவன இயக்குனர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

ஜூனியர்விகடன் பெயரையோ அல்லது சவுக்கு சங்கர் மற்றும் 6 ஆகிய பெயர்களைக் கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டி இருந்தால் அந்நிறுவனத்தினர் ஜூனியர்விகடன் நிறுவனத்தையோ அல்லது அதில் உள்ள இரண்டு நபர்களையோ அணுகி தெளிவு பெற்று இருக்கலாம். அது உண்மையா என்று விசாரித்து இருக்கலாம், ஆனால் காவல்துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும் இரவோடு இரவாக மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே கருதவேண்டியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் மூன்றாவது குற்றவாளியாக ஜூனியர் விகடன் அதில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் வரை அனைவரையும் கைது செய்ய காவல்துறைக்கு உரிமை வழங்கியுள்ளது.

இந்த பொய் புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்துக்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்திரிக்கை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசிய இதை ஆட்சியாளர்கள் அதிகார மமதையில் உச்சத்திற்கே சென்றுள்ளார்கள். அனைத்து செய்தி ஊடகங்களும் கைகட்டி வாய் பொத்தி தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்று இந்த அரசு எதிர்பார்க்கிறது. தாங்கள் செய்யும் தவறுகளை எந்த ஒரு ஊடகமும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு இந்த அரசு உத்தரவிட்டது போல் தெரிகிறது.

பத்திரிக்கை சுதந்திரம் பற்றிப் பேசும் திமுகவின் அரசியல் கூட்டணிகள் ஒரு சில சமூக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர் சங்கங்கள் பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு சில ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் ஒரு சில செய்தி ஊடகங்கள் என அனைத்தும் இந்த விடியா அரசின் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையை வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்ப்பதை பார்க்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்ற பாரதியின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

தங்களுக்கு வெண்சாமரம் வீசும் காட்சி ஊடகங்கள் மற்றும் அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற மமதையை இந்த அரசு விட்டொழிக்க வேண்டும் காவல்துறை அதிகாரிகள் தங்களிடம் கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்து உண்மை தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு திமுகவிற்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் வழக்கு பதிவு செய்த உடனே கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக மக்கள் விரைவில் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!