Pattina Pravesam : பட்டினப் பிரவேச தடைக்கு இதுதான் காரணம்.! போட்டு உடைத்த தருமபுரம் ஆதீனம் !

By Raghupati RFirst Published May 23, 2022, 7:54 PM IST
Highlights

Pattina Pravesam : மத வழிபாட்டு முறைகளுக்கு அரசு தடை விதித்ததற்கு, இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதி குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா, சிவநெறி தெய்வத் தமிழ் மாநாடு, ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழா என்று 11 நாட்கள் கொண்டாடப்படும்.இதில் 11ம் நாள் குருபூஜை விழாவில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது குருமகா சன்னிதானத்தை, சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் துாக்கிச் சென்று ஆதின திருமடத்தின் நான்கு வீதிகளில் வலம் வருவர். மனிதனை மனிதன் துாக்கி செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தது.

தை அடுத்து, கடந்த மாதம் பல்லக்கு துாக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. பாலாஜி தடை விதித்தார். மத வழிபாட்டு முறைகளுக்கு அரசு தடை விதித்ததற்கு, இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பல்லக்கு துாக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக கடந்த 7ம் தேதி ஆர்.டி.ஓ பாலாஜி ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில் குருபூஜை விழாவின் 11ம் நாளான நேற்று காலை குருஞானசம்பந்தர் குருபூஜை திருநாளையொட்டி, தருமபுரம் ஆதீன திருமடத்தில் சிவபூஜை, சொக்கநாதர் பூஜை, குருஞானசம்பந்தர் திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை, தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் செய்து, வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், துர்க்கை அம்மன் கோவில்களில் வழிபாடு நடத்தினார். 

மதியம், மகேஸ்வர பூஜை நடைபெற்றது. மாலை மேல குருமூர்த்தத்தில் குருமகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.இரவு தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு ஆபரணங்கள் அணிந்து, திருக்கூட்ட அடியார்கள் புடைசூழ, சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். பல்லக்கு ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளிலும் வலம் வந்தபோது, பக்தர்கள் பூர்ணகும்ப மரியாதை கொடுத்து சிறப்பு வரவேற்பு அளித்தனர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கினார்.

ஆதீன திருமடத்தில் உள்ள குருபூஜை மடத்தில் வழிபாடு செய்த குருமகா சன்னிதானம் ஞானக்கொலு காட்சியில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதினம் 28வது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், துலாவூர் ஆதீனம் அழகிய தேசிகர், திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் இளைய குரு மகா சன்னிதானம் சுந்தரேச சுவாமிகள் மற்றும் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா மற்றும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கண்டு தரிசித்து, குரு அருளைப் பெற்றனர். பட்டினப்பிரவேசம் விழாவையொட்டி, சுற்றுச்சூழலை பாதுகாக்க 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியையும், பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தலா ஒரு தேக்கு, செம்மர கன்றுகளை வழங்கும் திட்டத்தை தருமை ஆதீன குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தருமபுர ஆதீனம், 'தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமிக்க பட்டினப் பிரவேச விழா சிறப்பாக நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர், பல்வேறு ஆதீனங்கள், ஜியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த அனைவருக்கும் அருளாசி வழங்குவதாக கூறினார்.

அரசு கலைஞர்களுக்கு விருதுகொடுப்பதற்கு முன்பாக நமது ஆதீனங்கள்தான்  முதன்முதலாக கலைஞர்களை தேர்வுசெய்து விருது கொடுத்து அவர்களை அறிமுகப்படுத்தியது. ஆங்கிலேயர் ஆட்சிகாலம் முதல் பல்வேறு கட்சியினர் ஆட்சி பீடத்தில் இருந்தபோதிலிருந்த இந்த பட்டின பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி தடையில்லாமல் நடைபெற்றது.  பட்டினப் பிரவேச விழாவை உலகுக்கு தெரிவிப்பதற்காகவே இந்த தடை மற்றும் தடை விலக்கு சம்பவம் நடைபெற்றது' என்று கூறினார்.

இதையும் படிங்க : உங்களுக்கும் வீடு இருக்கு அமைச்சரே..! பார்த்துக்கோங்க.! அண்ணாமலைக்கு ஆதரவாக வரிந்து கட்டிய பொன்னார்

இதையும் படிங்க : ரீல் அறுந்து போச்சு அண்ணாமலை..மோடி முன்பு தீ குளிக்க முடியுமா ? பொளந்து கட்டும் காங்கிரஸ் எம்.பி

click me!