சமூக நல ஆர்வலர்களும், பொதுநல அமைப்பினரும், தொழில் நிறுவனத்தினர், மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும், தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு துணைநின்று உதவிக்கரம் அளித்து வருகிறார்கள்.
இயல்பு வாழ்க்கை திரும்பிட இணைந்து நிற்போம் என புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் முதலமைச்சர் என்ற முறையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஒன்றியம் முழுவதும் கொரோனா தொடரின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் கடுமையாக இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். இந்த பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாப்பது அரசின் முதன்மையான பணியாகும்.
தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதுடன் இந்த தடை காலத்தில் பொருளாதார நெருக்கடியை அவர்கள் சமாளிக்கும் வகையில் குடும்ப அட்டைக்கு 2000 வழங்கப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி, மருந்துகள் ஆகியவை தடையின்றி கிடைப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்கும் எனது தலைமையிலான அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. அரசு துறை சார்ந்த அதிகாரிகள், முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையில் அனைத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகம், பத்திரிக்கை துறையினர் என பல தரப்பினரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்கும் பணியில் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர்.
சமூக நல ஆர்வலர்களும், பொதுநல அமைப்பினரும், தொழில் நிறுவனத்தினர், மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும், தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு துணைநின்று உதவிக்கரம் அளித்து வருகிறார்கள்.16வது சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள், தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில் வெவ்வேறு கட்சியைச் சார்ந்தவர்களாக களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது. எனவே மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிக்கு சென்று பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் தொகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, அல்லது படுக்கை வசதி, ஆக்சிஜன் மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலும், இந்த அரசின் கவனத்திற்கு விரைந்து கொண்டுவர கோருகிறேன். எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களைப் பாதுகாப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். கொரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதை கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம். என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.