தமிழகத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் அலுவல உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், தூய்மைப் பணியாளர், காவலாளி போன்ற 3,557 பணியிடங்கள் காலியாக இருந்தது.
நீதிமன்றங்களில் வேலைக்காக சிபாரிசு கடிதம் கேட்டு யாரும் வர வேண்டாம் என்று புதுக்கோட்டையில் உள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வீட்டு முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் அலுவல உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், தூய்மைப் பணியாளர், காவலாளி போன்ற 3,557 பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதினர்.
இந்த பணிகள் தொடர்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில சட்டத்துறை அமைச்சரின் பரிந்துரைக் கடிதம் பெற்று, அரசுப் பணியிடத்தைப் பெறுவதற்கு திமுகவினர் மட்டுமின்றி பொதுமக்கள் பலருமே தினசரி அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதியிலுள்ள அவரின் வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டிருக்கிறது.
அதில், வேலைக்கு சிபாரிசு கடிதம் கேட்டு யாரும் வர வேண்டாம். நீதிமன்ற பணியாளர் வேலையை பெறுவதற்கு நேரடியாகவும், கட்சி பிரமுகர்கள் சிபாரிசுடனும் பலர் முயற்சி செய்கின்றனர். தன்னிடம் யாரும் பரிந்துரை கடிதம் கேட்டு வர வேண்டாம். நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வு குழுவினரே பணியாளர்களை தேர்வு செய்கின்றனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.