நல்லா இருக்கியாப்பா, ஒன்னும் ஆகலையே என்று அக்கறையாக விசாரிக்காவிட்டாலும் பரவாயில்லை; எங்களை இப்படியா காய்ச்சி எடுப்பது என்று, செல்வராஜின் ஆதரவாளர்கள் நொந்து போயுள்ளனர்.
இலங்கை குண்டு வெடிப்பில் தப்பி வந்த தம்மை, திமுகவினர் அக்கறையோடு விசாரிப்பார்கள் என்று எதிர்பார்த்த திருப்பூர் முன்னாள் மேயர் செல்வராஜை, கட்சி தலைமை கண்டித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருப்பூர் முன்னாள் மேயரும், திமுக திருப்பூர் மாவட்ட செயலாளருமான செல்வராஜ், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சூட்டோடு, களைப்பை போக்கிக் கொள்வதற்காக இலங்கைக்கு சுற்றுலா சென்றார். தன்னுடன், தனக்கு வேண்டப்பட்ட ஆதரவாளர்கள் ஆறு பேரையும் அழைத்துச் சென்றார்.
ஜாலியாக இருக்கலாம் என்ற அவரது எண்ணத்தில் மண்ணை போட்டது, இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம். செல்வராஜும், அவருடன் சென்றவர்களும் தங்கியிருந்த ஓட்டலும், குண்டு வெடிப்புக்கு தப்பவில்லை. ஆனால் அதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது செல்வராஜ் அண்ட் கோ.
அதன் பிறகு, மரண பீதியோடு, திமுக நிர்வாகிகள் அனைவருமே தமிழ்நாட்டை வந்தடைந்தனர். ஆனால், இங்கு தான் தலைவலியும் ஆரம்பமானது. அக்கறையாக விசாரிப்பதற்கு பதிலாக, திமுக மேலிடம் செல்வராஜ் தரப்புக்கு குட்டு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டோஸ் தான் கிடைத்ததாக பேசிக் கொள்கிறார்கள்.
திருப்பூர் அருகே உள்ள சூலூரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பணிகளை கவனிக்காமல், அதற்குள் இலங்கைக்கு செல்ல வேண்டுமா? என்று, திமுக மூத்த நிர்வாகிகள் செல்வராஜிடம் கேட்டதாக, கட்சி வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.