ஒரே நிமிடத்தில் ஆட்சிக்கு சங்கு ஊதிடுவோம்... கருணாநிதியால் தப்பிச்சீங்க... எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் வார்னிங்!

By Asianet TamilFirst Published Jul 30, 2019, 7:19 AM IST
Highlights

கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்கள் என அனைத்து  தரப்பினருக்கும் உதவும் கரங்களாக இருந்தார். ஆனால், இப்போது இருக்கும் எடப்பாடியோ உதவாக்கரையாக இருக்கிறார்,

நாம் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியும். ஆனால், கருணாநிதியின் கொள்கையால் நாம் அவ்வாறு செய்யாமல் இருந்துவருகிறோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூரில் ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து, அணைக்கட்டு பகுதிகளில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “மத்தியில் உள்ள மோடி ஆட்சியும் மாநிலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை. பாஜகவைத் தமிழகம் புறக்கணிப்பதால் நம் தாய் மொழியான தமிழை அழிக்க பாஜக அரசு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அதற்காகவும் மக்கள் பிரச்னைகளுக்காகவும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவே இல்லை. தேர்தல் முடங்கிப்போய் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் மக்களின் அடிப்படை பிரச்னைகள் அதிமுக ஆட்சியில் தீர்க்கப்படாமல் உள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல துண்டுகளாக உடைந்துள்ளது. நாம் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியும். ஆனால், கருணாநிதியின் கொள்கையால் நாம் அவ்வாறு செய்யாமல் இருந்துவருகிறோம். குறுக்கு வழியில் வரக் கூடாது என்று கருணாநிதி நமக்கு பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்.


கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்கள் என அனைத்து  தரப்பினருக்கும் உதவும் கரங்களாக இருந்தார். ஆனால், இப்போது இருக்கும் எடப்பாடியோ உதவாக்கரையாக இருக்கிறார்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

click me!